நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டிடம் இடிந்த விவகாரம்.. ஐ.ஐ.டி. குழு ஆய்வுக்கு வலியுறுத்தும் திமுக..!
நாமக்கல்: நாமக்கல் மருத்துவக்கல்லூரி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது தொடர்பாக ஐ.ஐ.டி. நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
தரமற்ற பொருட்களை கொண்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்றதே கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் எனக் கூறி நாமக்கல் மாவட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
மேலும், மருத்துவக் கல்லூரி கட்டிடம் தரமில்லாமல் இருந்ததை அமைச்சர் தங்கமணியே ஒப்புக்கொண்டதாக அவர்கள் விமர்சித்துள்ளனர்.
நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டிடம் ரூ.330 கோடியில் கட்டப்பட்டு வரும் நிலையில் கடந்த 30-ம் தேதியன்று கட்டிடத்தின் முகப்பு பகுதி இடிந்து விழுந்தது. இது நாமக்கல் பகுதி மக்களை அதிர்ச்சிக் கொள்ள வைத்தது.
திமுக நம்மை மதிப்பதில்லை... புதுக்கோட்டை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவேசம்... சஞ்சய் தத் திகைப்பு..!
இதையடுத்து கட்டிடத்தை ஆய்வு செய்த அமைச்சர் தங்கமணி, கட்டிடம் இடிந்து விழவில்லை என்றும் அதிகாரிகளால் இடிக்கப்பட்டது எனவும் கூறினார். அதிகாரிகளே இடித்தால் வடமாநில தொழிலாளர்கள் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது எப்படி என திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார், வினவியுள்ளார். மேலும், அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி அதில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றியுள்ளார்.
நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை சென்னை ஐ.ஐ.டி நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இதற்காக தமிழக அரசுக்கு 10 நாட்கள் கெடுவிதித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மான நகலில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொமதேக, ஐயூஎம்எல், உள்ளிட்ட கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் கையெழுத்திட்டனர்.
தங்கள் கோரிக்கைப் படி ஐஐடி நிபுணர்களை கொண்டு நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டிடம் ஆய்வு செய்யப்படவில்லை என்றால், மக்களை திரட்டி நாமக்கல்லில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.