மரத்தடியில் திமுக கிராம சபை கூட்டம்.. இவ்வளவு பேர் திரண்டது எப்படி..? டென்ஷனான அமைச்சர் தங்கமணி..!
நாமக்கல்: தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்களை தமிழக அரசு திடீரென ரத்து செய்த நிலையில் தடையை மீறி திமுகவினர் இந்தக் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றதை அடுத்து தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் மக்கள் சந்திப்பு கூட்டம் என்ற பெயரில் கிராம சபை கூட்டங்களை நடத்தினர். அந்தவகையில் நாமக்கல் மாவட்டம் ரெட்டியப்பட்டி ஊராட்சியில் திமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மசோதாக்களை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அந்த மாவட்ட அமைச்சரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான தங்கமணி கவனத்திற்கு சென்றதை அடுத்து அவர் டென்ஷன் ஆகியுள்ளார்.
சென்னையில் தங்கி அதிமுகவில் நிலவிவரும் உட்கட்சி பிரச்சனைகளை சரிசெய்யும் பணியில் அவர் தீவிரம் காட்டி வரும் சூழலிலும், சொந்த மாவட்டமான நாமக்கல்லில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். திமுக மாவட்டப் பொறுப்பாளர் ராஜேஷ்குமார் கிராம சபைக் கூட்டத்தை நடத்தி முடிக்கும் வரை என்ன செய்தார்கள் அதிகாரிகள் என வினவியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இவ்வளவு பேர் எப்படி திரண்டார்கள் என லோக்கல் அதிமுகவினரிடம் விசாரித்திருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் உள்ளூர் அரசியலிலும் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் தங்கமணி. இதனிடையே அவருக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் திமுக இளைஞரணியில் இருந்து மாவட்டப் பொறுப்பாளராக புரோமோஷன் பெற்ற ராஜேஷ்குமார் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.