சிகிச்சைக்கு பணமில்லாமல் புற்றுநோயால் அவதியுற்ற பெண்.. கிராமசபையில் நிதியுதவி செய்த திமுக நிர்வாகி.!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்த பார்வதி என்ற பெண்ணுக்கு, திமுக மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் சொந்த நிதியில் இருந்து நிதி உதவி செய்திருக்கிறார்.
தமிழகம் முழுவதும் உள்ள 16,500 ஊராட்சிகளில் திமுக மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் ராஜேஷ் குமார் கலந்துகொண்டார்.
அதில் கலந்துகொண்ட கிராம மக்கள் வழக்கமான தங்கள் பகுதி குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்க, ஒரு பெண் மட்டும் தயங்கியவாறு மருத்துவ உதவி கேட்டார்.
முள்ளுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பார்வதி என்ற அந்த பெண்ணிடம், தயக்கமின்றி என்ன உதவி வேண்டுமானாலும் கேட்கலாம் என்றும் மக்களுக்கு உதவுவதற்காக தான் இந்த கூட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தக் கூறியிருப்பதாகவும் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
இதையடுத்து தாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான பணமில்லாமல் அவதியுறுவதாகவும் பார்வதி என்பவர் கூறினார். மேலும், தனது குடும்ப வறுமை சூழல் குறித்தும் கிராம சபைக் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
இதையடுத்து நிகழ்விடத்திலேயே தனது உதவியாளரை அழைத்த திமுக மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவச் சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தியதுடன் சொந்த நிதியில் இருந்து பண உதவியும் செய்தார்.
மேலும், முதலில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு என்ன மாற்றம் நடந்துவிடப் போகிறது என தாம் எண்ணியதாகவும் ஆனால் கிராம சபைக் கூட்டம் மூலம் தனக்கு மருத்துவ சிகிச்சைக்கான உதவி கிடைத்துள்ளதாகவும் புற்றுநோயாளி பார்வதி நெகிழ்ந்துள்ளார்.