அக்காவின் படிப்புக்காக சுண்டல் வியாபாரம் செய்த சிறுவன்... Oppo போன் வாங்கிக் கொடுத்த திமுக மா.செ..!
நாமக்கல்: அக்காவின் கல்லூரி படிப்புக்காக சுண்டல் வியாபாரம் செய்த சிறுவனுக்கு ஒப்போ ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார் திமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ் குமார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கு சர்க்கரை நோய் காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்னர் இடது கால் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதால் வீட்டாளாக இருந்து வருகிறார். அவரது மனைவி ஜெயமணி கூலி வேலைக்கு சென்று இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில் ரவிச்சந்திரனின் மகள் வர்ஷினி பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். மகன் கவிச்செல்வன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலம் என்பதால் ஜெயமணிக்கு கிடைத்த கூலி வேலையும் சில மாதங்களாக கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தின் வறுமையை நீக்கவும் தன் அக்காவை கல்லூரியில் படிக்க வைக்கவும் வேண்டி சுண்டல் விற்கத் தொடங்கியிருக்கிறார் கவிச்செல்வன்.
ராசிபுரம் பேருந்து நிலையத்தில் கவிச்செல்வன் சுண்டல் விற்கும் தகவலும் அந்த சிறுவனின் குடும்பப் பிண்ணனியும் சமூக ஆர்வலர்கள் சிலர் மூலம் திமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமாருக்கு சென்றுள்ளது. இதையடுத்து சிறுவன் கவிச்செல்வனை நேரில் சென்று சந்தித்த அவர் சுண்டல் விற்பதை விடுத்து, படிப்பில் கவனம் செலுத்துமாறும் கல்விக்கட்டணம் தொடர்பாக எந்த உதவி தேவைப்பட்டாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறி தனது அலைபேசி எண்ணை கொடுத்திருக்கிறார்.
இதையடுத்து சிறுவன் கவிச்செல்வன் தனது அக்காவுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடப்பதால் செல்போன் வாங்கவசதியின்றி அத்தை வீட்டில் தங்கி படித்து வருவதாக கண்ணீர் மல்க கூறியுள்ளான். அக்கா தன்னுடன் தங்கள் வீட்டில் இருந்து படிக்க வேண்டும் என்பதற்காக ஸ்மார்ட் போன் வாங்கவேண்டி சுண்டல் விற்பது உள்ளிட்ட கிடைத்த பணிகளையெல்லாம் தாம் செய்து வருவதாக தெரிவித்திருக்கிறான்.
கவிச்செல்வன் வீட்டிற்கு சென்ற நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் தனது சொந்தப்பணத்தில் இருந்து நிதி உதவி செய்ததுடன் ஒப்போ ஸ்மார்ட் போன் ஒன்றையும் வாங்கிக்கொடுத்துள்ளார். இதனால் நெகிழ்ந்த சிறுவன் கவிச்செல்வன் இனி தானும் கல்வியில் தீவிர கவனம் செலுத்தி நல்ல நிலைக்கு வருவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளான்.