மனைவிக்கு துணைத் தலைவர் பதவி கேட்ட ஆறுமுகம்.. மறுத்த செந்தில்குமார்.. கொலை!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்காக நண்பனையே மதுபானத்தில் அமிலம் கலந்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள இருக்கூரைச் சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் செந்தில்குமார், இவரது மனைவி சத்யா. இருக்கூர் ஊராட்சியின் 6 வது வார்டு உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் இருக்கூர் ஊராட்சியின் 2 வது வார்டு உறுப்பினராக திமுக பிரமுகர் ஆறுமுகம் என்பவரது மனைவி ராஜாமணியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் செந்தில்குமாரும் ஆறுமுகமும் கடந்த 20 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள் என கூறப்படுகிறது. இருப்பினும் இருக்கூர் ஊராட்சி மன்ற துணைதலைவர் பதவியை தனது மனைவிக்கு விட்டுத்தரக்கோரி ஆறுமுகம் செந்தில்குமாரிடம் கேட்டுள்ளார். இதனை செந்தில்குமார் மறுக்கவே ஆத்திரமடைந்த ஆறுமுகம் செந்தில்குமாரை கடந்த டிசம்பர் 29 ஆம் தேதியன்று மது அருந்த அழைத்துள்ளார்.
அப்போது செந்தில்குமாரும் அவரது நண்பரான தியாகராஜனும் மது அருந்த இருக்கூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு ஆறுமுகமும் அவரது நண்பரான இருக்கூர் ஊராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் சரவணனும் இணைந்து, செந்தில்குமார் மற்றும் தியாகராஜன் அருந்தும் மதுவில் அமிலத்தை கலந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறியாத இருவரும் மது அருந்திய சிறிது நேரத்தில் தீவிர வயிற்றுவலி காரணமாக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் மேல்சிகிச்சைக்காக இருவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவர்கள் இருவரையும் பரிசோதனை செய்ததில் அமிலம் கலந்த மதுவை அருந்தியதன் காரணமாக உடல் உள்ளுறுப்புகள் சேதமடைந்ததாக தெரிவித்தனர்.
பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு செந்தில்குமார் உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனையில் தியாகராஜனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுட்டும்.. குத்தியும் கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன்.. பூந்துறையில் பதுங்கியிருந்த ரபீக்.. மடக்கிய போலீஸ்
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பரமத்தி போலீசார் ஆறுமுகத்தையும் அவருக்கு உடந்தையாக இருந்த சரவணனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ஆறுமுகம் ஏற்கனவே கந்தன்நகரை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் காப்பியில் அமிலத்தை கலந்து கொன்றதாகவும், அதேபோல் செந்தில்குமாரையும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அதன்பின் ஆறுமுகம் மற்றும் சரவணனை போலீசார் சிறையில் அடைத்தனர். தலைவர் பதவிக்காக நண்பனையே மதுவில் அமிலம் கலந்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.