ஆஞ்சநேயர் கோவில் தரிசனம்... அதிமுக தொண்டர் வீட்டில் டீ - எடப்பாடியாரின் வட இந்தியா பாணி பிரச்சாரம்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்து கோரிக்கை வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஏழை தொண்டரின் வீட்டில் டீ சாப்பிட்டு பிரச்சாரம் செய்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.
நாமக்கல்: ஏழைகள் வீட்டில் உணவு சாப்பிட்டு வாக்கு சேகரிப்பது வட இந்திய அரசியல் தலைவர்களின் பாணி. அதே பாணியை பின்பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏழை தொண்டரின் வீட்டில் டீ குடித்து விட்டு வாக்கு சேகரித்துள்ளார். அதற்கு முன்னதாக நாமக்கல் ஆஞ்சநேயரிடம் கோரிக்கை வைத்து வழிபாடு செய்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் களம் படு பரபரப்பை எட்டியுள்ளது. அதிமுக, திமுக, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் அரசியல் கட்சித் தலைவர்கள் செல்பி எடுப்பது, சாலையோர கடைகளில் டீ குடிப்பது என பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்யும் போது முதலமைப்பட்டியில் உள்ள அண்ணாநகர் அருந்ததியர் காலனியில் உள்ள சாதாரண தொண்டரின் வீட்டில் டீ குடித்து விட்டு பிரச்சாரம் செய்தது அனைவரையும் கவர்ந்துள்ளது.
வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற பெயரில் 3 பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல்லில் நேற்று தொடங்கினார். அங்குள்ள பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய முதல்வர் சென்ற போது அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை வழங்கி முதல்வரை வரவேற்றனர். பின்னர் அங்கு சிறப்பு அர்ச்சனையுடன் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம் செய்தார். தமிழக முதல்வர் என்ற நிலையில் இக்கோவிலுக்கு யாரும் இதுவரை வந்ததில்லை முதல்முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் வரப்பிரசாதி என்பதால் இந்த கோயிலுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் வந்து சென்றுள்ளனர். இப்போது எடப்பாடி பழனிச்சாமி தனது கோரிக்கைகளை வைத்து வழிபட்டுள்ளார்.
தொடர்ந்து நாமக்கல் நகரப் பகுதியில் நடந்தே சென்று பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி,
பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முதலமைப்பட்டியில் உள்ள அண்ணாநகர் அருந்ததியர் காலனிக்கு சென்ற அவர், அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களிடம் அதிமுகவுக்கு வாக்குகளை சேகரித்ததுடன், அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
திடீரென அங்குள்ள அதிமுக தொண்டரின் வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அமைச்சர்களும் உடனிருந்தனர்.
வட இந்தியாவில் அரசியல் தலைவர்கள் வாக்கு சேகரிக்க போகும் போது தலித் சமுதாய மக்களின் வீட்டிற்கு சென்று உணவு சாப்பிட்டு வாக்கு சேகரிப்பார்கள். அதே பாணியை கடைபிடித்து வாக்கு சேகரிக்கிறார் முதல்வர் பழனிச்சாமி. கடந்த சட்டசபை தேர்தலின் போது ஹெலிகாப்டர் பிரச்சாரங்களை மட்டுமே பார்த்த தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அணுகுமுறை சற்றே வித்தியாசமாகத்தான் இருக்கிறது.