கொரோனா பீதியா?.. 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை சரிவு.. கோழிக் கறி விலையும் வீழ்ச்சி
நாமக்கல்: நாமக்கல்லில் ஒரு முட்டையின் விலை 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இது கொரோனா பீதியால் ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
Recommended Video
கோழி, முட்டை பண்ணைக்குப் பெயர் போனது நாமக்கல் மாவட்டம். இங்கு ஏராளமான கோழிப் பண்ணைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக பல்வேறு நாடுகளில் நுழைந்த கொரோனை வைரஸ் அந்த நாடுகளையே ஒரு புரட்டு புரட்டி வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா தீவிரமடைந்தவுடன் கோழிக் கறி மூலம் கொரோனா பரவுவதாக தவறான தகவல் பரவியது. இதை பரப்பியவர்களை போலீஸார் கைது செய்தனர்.
கோழிக் கறி
விசாரணையில் கடனுக்கு கறிக் கொடுக்காததால் அவ்வாறு அவதூறு பரப்பியதாக அந்த நபர் தெரிவித்தார். அந்த செய்தி வதந்தி என்றாலும் கூட கோழிக் கறியின் விலை சற்று இறங்கியுள்ளது. சென்னையில் கோழிக் கறி கிலோ ரூ 180 முதல் 200 வரை விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் தற்போது ரூ 100 முதல் 110 வரை விற்பனையாகிறது. இதனால் விற்பனையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நோய் பரவாது
என்னதான் கோழிக் கறியால் எந்த நோயும் பரவாது என விழிப்புணர்வு செய்தாலும் சொந்த காசில் சூனியம் வச்சுக்க வேண்டாம் என எண்ணி ஆட்டுக் கறி, கடல் வாழ் உயிரினங்களை நாடி செல்கின்றனர். இதனால் மீனின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. அது போல் ஆட்டுக் கறியின் விலையும் கிலோவுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
வெறிச்சோடி
மீனின் விலையும் உயர்ந்துள்ளது. கிலோ ரூ. 600-க்கு விற்கப்பட்டு வந்த வஞ்சரம் மீன் தற்போது 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அது போல் நண்டு, இறால்களின் விலையும் அதிகரித்துள்ளது. மீன், ஆட்டுக் கறி, நண்டு ஆகிய விற்பனையகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோழி கறி விற்பனை கடைகளில் வெறிச்சோடி காணப்படுவதால் வியாபாரிகள் வேலையின்றி அவதிப்படுகின்றனர்.
கோழிக் கறி
அது போல் முட்டையின் விலையும் தற்போது சரிந்து விட்டது. நாமக்கல்லில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை சரிந்துள்ளது. ஒரு முட்டையின் விலை 25 காசுகள் குறைந்து ரூ 2.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா பீதி மற்றும் கேரளத்தில் பறவைக் காய்ச்சலால் கோழிக் கறி, முட்டையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.