பெண்களே உங்கள் குடும்பக் கஷ்டங்களை முகநூலில் பகிர்கிறீர்களா?.. இதைப் படிங்க முதல்ல!
நாமக்கல்: முகநூலில் ஏற்பட்ட தேவையில்லாத நட்பால் கணவன், தாய், தந்தை, குழந்தைகளைப் பிரிந்து தனது அனுமதியில்லாமல் பாதி சிகிச்சையை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பியதால் பெண் ஒருவர் மனவேதனை அடைந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சார்ந்தவர் தங்கவேல். அவரது மகள் இந்திரா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி திருச்செங்கோட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு கனடா நாட்டிற்கு சென்றுவிட்டனர். கணவர் பிரபாகரன் கட்டட வடிவமைப்பு பொறியாளராகவும், இந்திரா வங்கியிலும் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
மனவிரக்தி
சந்தோஷமாக குடும்ப வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு விடுமுறை நாட்களை கழிப்பதற்காக இந்திரா உள்ளிட்டோர் திருச்செங்கோடு வந்தனர். அங்கு தனது தந்தை, கணவருடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாகவும் அதனால் ஏற்பட்ட மனவிரக்தியின் காரணமாகவும் இந்திரா, தாய் வீட்டிற்கு செல்லாமல் தனது தங்கையின் வீட்டில் இருந்துள்ளார்.
முகநூல்
3 மாத காலமாக அங்கு இருந்தபோது தனக்கு ஏற்பட்ட மனவிரக்தியை போக்குவதற்காக சமூக வலைதளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப்பை நாடியுள்ளார். அப்போது இவருக்கு ஆதரவாகவும், இவருடைய கருத்துக்களை போன்று ஒத்துப் போகின்ற வகையில் முகநூலில் நட்பு வட்டாரம் கிடைத்துள்ளது.
நட்புகளுடன்
அந்த முகநூல் வட்டத்திற்குள் சென்ற அவருக்கு புதுமையான உறவுகள் கிடைத்துள்ளது. சக ஆண்கள், பெண்கள் தங்களது உடன் பிறந்தவர்கள் போன்று தங்கள் இன்ப, துன்பங்களை பகிர்ந்துள்ளனர். அப்போது இவரின் மன சுமையை போக்கிக் கொள்ள சேலம் மற்றும் சென்னையில் வழிகாட்டுதல் போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு அந்த நட்புக்களுடனேயே இருந்துள்ளார்.
ஆஜர்படுத்த கோரிக்கை
தன்னுடையை குடும்பத்தை மறந்து நட்பு வட்டத்திலேயே இருந்ததால் அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் தமக்கு தேவையில்லை என்ற நிலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நட்பு வட்டத்தில் உள்ள சக நண்பர்கள் மூலமாக தனது குழந்தைகள், பெற்றோர் மற்றும் கணவரிடம் இருப்பதாகவும், அவர்களை என்னால் பார்க்க முடியில்லை அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனக் கூறி ஆட்கொணர்வு மனு வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திரா வழக்கு தொடர்ந்தார்.
மனநல மருத்துவமனை
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செங்கோட்டில் இந்திராவின் தாத்தா இறந்ததை அடுத்து தகவலறிந்து அங்கு வந்த அவரை அவரது பெற்றோர் மற்றும் கணவர் அவரை வலுக்கட்டாயமாக கரூரை அடுத்த காந்திகிராமத்தில் உள்ள மனநல மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
உரிய பாதுகாப்பு இல்லை
அங்கு அவருக்கு சிகிச்சை அளிகப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உறுதுணையாக இருந்த வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் இந்திரா வலுக்கட்டாயமாக மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உரிய பாதுகாப்பு இல்லை என வழக்கு தொடர்ந்திருந்தார்.
அறிக்கை
இதனை ஏற்ற நீதிபதி குழு ஒன்று அமைத்து சிகிச்சை பெற்று வருவதை உறுதிபடுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து மனநலம் மருத்துவமனைக்கு வந்த அந்த குழுவினர் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதையும், அவருடன் அவரது கணவர், தாய், தந்தை, தங்கை ஆகியோர் உடன் இருப்பதாக அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
வீடியோ
இதனையடுத்து அவருக்கு உரிய முறையான சிகிச்சை அளிக்கும்படி மனநல மருத்துவமனை மருத்துவருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியதை அடுத்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில் நீதிமன்ற குழு வந்தபோது வந்த சிலர் சிகிச்சை பெற்று வந்த இந்திராவை, "யார் உங்களை இங்கு அடைத்து வைத்துள்ளார்கள், குழந்தைகளை காண்பித்தார்களா" என்பன உள்ளிட்ட கேள்விகளை கேட்டு அவற்றை வீடியோவாக பதிவு செய்தனர்.
சர்ச்சைக்கு
மேலும் தனியார் மனநல மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளதாகவும், அவரை காப்பாற்ற வேண்டும் எனக் கூறி சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர். இந்தியா மற்றும் கனடா நாட்டில் உள்ள தூதரகங்களும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இது தொடர்பாக புகார்கள் முகநூல் நட்புகள் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் சர்ச்சைக்கு இந்திராவின் குடும்பத்தினர் ஆளாகினர்.
பேட்டி
இதையடுத்து இந்திரா, அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் செந்தில் வேலன் மற்றும் கணவர் பிரபாகரன் ஆகியோர் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் இந்திராவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக தற்போது அவர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.
வீடியோ எடுத்து பரப்பிய நண்பர்கள்
அவருக்கு தெரியாமல், பாதி சிகிச்சையில் இருந்த போது மர்ம நபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிவிட்டனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்திரா கூறுகையில் எனது குழந்தைகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினை திரும்ப பெறப் போகிறேன்.
பகிராதீர்
தன்னுடைய குடும்ப கஷ்டங்களை சமூக வலை தளங்களில் பகிர வேண்டாம். சுய விபரங்களை சமூக வலைதளங்காள வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பகிர வேண்டாம். நமக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக பேசும் நண்பர்கள் ஒரு கட்டத்தில் அவர்களுடனே அழைத்துச் சென்று விடுவார்கள் என்றார் இந்திரா.