தந்தை மரணம்.. அதிர்ச்சியில் மகளும் இறந்தார்.. நாமக்கல் அருகே சோகம்!
ராசிபுரம் அருகே தந்தை இறந்த அதிர்ச்சியில் மகள் உயிரிழந்தார்.
நாமக்கல்: தந்தை இறந்த அதிர்ச்சியில் மகளும் உயிரிழந்த சம்பவத்தினால் அந்த கிராம மக்கள் ரொம்பவே உறைந்து போய் உள்ளனர்.
ராசிபுரம் அருகே உள்ள ஊர் கூனவேலம்பட்டி புதூர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன். இவரது மகள் அம்பாயி. இவருக்கு 15 வருஷங்களுக்கு முன்பு திருமணம் நடந்து விட்டது.
ஆனால் கணவனுடன் பிரச்சனை காரணமாக சண்டை போட்டுக் கொண்டு அம்மா வீட்டுக்கே அம்பாயி வந்துவிட்டார். பிறகு முறைப்படி கோர்ட்டில் விவாகரத்தும் பெற்றுவிட்டார்.
இந்நிலையில் துளசிராமனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. கிட்னி பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர அளிக்கப்பட்டும், அது பலனளிக்காமல் துளிசிராமன் இன்று காலை இறந்துவிட்டார்.
இதையடுத்து ஆஸ்பத்திரியில் இருந்து துளசிராமன் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது தந்தையின் சடலத்தை பார்த்த அம்பாயி அப்படியே உறைந்து போய் நின்றார். பின்னர் தந்தையின் உடல் மீது அதிர்ச்சியுடன் சாய்ந்தார். அதோடு சரி... தந்தையின் மீது சாய்ந்தபடியே மகளின் உயிரும் பிரிந்தது.
இதனால் கிராம மக்கள் இன்னும் அதிர்ச்சியடைந்தனர். அடுத்தடுத்து தந்தையும், மகளும் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.