பழைய வீட்டை இடிக்க முயற்சி.. சரிந்த மண் சுவர்.. வேடிக்கைப் பார்த்த பாட்டி, பேத்தி உட்பட மூவர் பலி
நாமக்கல்: பழைய வீட்டை இடிக்க முற்பட்ட போது, சுவர் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம் அருகே கணக்கத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (65). இவரது மனைவி மல்லிகா (60). இவர்களது மகன் ஜெயக்குமார் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சின்னதம்பி தனது வீட்டின் அருகே உள்ள பழமையான வீட்டை இடித்து அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அதனை முன்னிட்டு, இன்று (மார்ச்.4) காலை 11 மணியளவில் வீட்டின் ஓடுகளை அகற்றி விட்டு, சுவரை இடிக்க முற்பட்டபோது திடீரென மண் சுவர் சரிந்து கீழே விழுந்தது.
அப்போது வீடு இடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மனைவி பூங்கொடி (55) மற்றும் அவரது இரண்டு வயதுடைய பேத்தி தேவிஸ்ரீ மற்றும் சின்னதம்பி ஆகியோர் மீது சுவர் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவர் இடிந்து விழுந்து மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.