பாஜக தலைவர் எல்.முருகனுக்கு டஃப் கொடுக்கும் திமுக மாவட்டப் பொறுப்பாளர்...!
நாமக்கல்: பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனின் சொந்த மாவட்டமான நாமக்கல்லில், அருந்ததியினர் சமுதாய இளைஞர்களை கிராமம் கிராமமாக சென்று சந்தித்து அவர்களை திமுகவில் இணைத்து வருகிறார் அக்கட்சியின் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ராஜேஷ்குமார்.
இதன் மூலம் வி.பி.துரைசாமி, எல்.முருகன் போன்றோருக்கு டஃப் கொடுப்பதோடு, அருந்ததியினர் இன மக்களின் ஆதரவை திமுகவுக்கு தக்கவைக்க முயற்சி செய்து வருகிறார்.
முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் காந்திச்செல்வன், பார்.இளங்கோவன் சற்று ஒதுங்கியே நின்றாலும் கூட, அதைப்பற்றி பொருட்படுத்தாது மாவட்டத்தை வலம் வருகிறார் இவர்.
ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்... மத்திய அமைச்சரவை முடிவுக்கு திமுக கடும் கண்டனம்
கிராமம் கிராமமாக
நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார். போர்வெல், விவசாயம் உள்ளிட்ட தொழில்களை கவனித்து வரும் இவர், இளைஞரணியில் இருந்து மாவட்டப் பொறுப்பாளராக புரோமோஷன் செய்யப்பட்டவர். இவருக்கு திமுகவில் மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுத்தது முதல் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், முன்னாள் நாமக்கல் மாவட்டச் செயலாளருமான காந்திச்செல்வன் சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார்.
கட்சியினரை ஈர்க்க
இதனிடையே நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக பதவியேற்றது முதல் பல்வேறு புதுமையான அறிவிப்புகளை வெளியிட்டு கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார் ராஜேஷ்குமார். மு.க.ஸ்டாலின் படம் போட்டு கட்சியினர் திருமண அழைப்பிதழ் அடித்தால் அவர்களுக்கு நிதியுதவி, ஏழ்மையான நிலையில் உள்ள கட்சிக்காரர்கள் குடும்பத்தில் யாராவது இறந்தால் ரூ.5,000 உதவித்தொகை என அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் காரை எடுத்துக்கொண்டு தனது கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு கிராமங்களிலும் வாரம் இரு முறையாவது தலையை காட்டுகிறார்.
எல்.முருகன் மாவட்டம்
இந்நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி அண்மையில் பாஜகவுக்கு சென்றதை அடுத்து, கொங்கு மண்டலத்தில் உள்ள அருந்ததியினர் சமுதாய இளைஞர்களை அவர் மூலம் பாஜகவில் இணைக்க திட்டமிடப்பட்டது. அதிலும் குறிப்பாக வி.பி.துரைசாமி, எல்.முருகன், ஆகியோரின் சொந்த மாவட்டமான நாமக்கல்லில் பெருவாரியாக அருந்ததியினர் சமுதாய இளைஞர்களை பாஜகவில் இணைக்க காய் நகர்த்தப்பட்டது.
முந்திக்கொண்டு
இதனிடையே வி.பி.துரைசாமி மூலம் பாஜக முன்னெடுக்கும் அசைன்மெண்ட்டுக்கு முன்பாக, அருந்ததியினர் சமுதாய இளைஞர்களை திமுகவில் சேர்த்து வருகிறார் ராஜேஷ்குமார். ராசிபுரம், சேந்தமங்கலம் ஒன்றியங்களில் கிராமம் கிராமமாக சென்று திமுக பெற்றுக்கொடுத்த இட ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களை தெருப்பிரச்சாரம் மூலம் விளக்கி கூறுகிறார். இதனிடையே அமைச்சர் தங்கமணியின் சொந்த மாவட்டமும் நாமக்கல் என்பதால் அங்கு உள்ளூர் அரசியல் அனல் பறக்கிறது.