பெண்களுக்கு டிக்கெட் விலை ரூ.2 மட்டுமே... நாமக்கல் தனியார் டவுன் பஸ் நிறுவனம் அசத்தல்..!
நாமக்கல்: அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற நிலையில், நாமக்கல்லில் உள்ள தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று மகளிருக்கு கட்டணச் சலுகை வழங்கியுள்ளது.
முதலமைச்சராக பதவியேற்றவுடன் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட 5 கோப்புகளில் முக்கியமானது, பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணத் திட்டம்.
இந்த திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்துவிட்டதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பலரும் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். தனியார் பேருந்துகளை காட்டிலும் அரசுப் பேருந்துகளில் பயணிப்பதற்கே பெண்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
இதனால் பெரும்பாலான தனியார் டவுன் பஸ்கள் கடந்த 2 நாட்களாக வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்நிலையில் அள்ளிக் கொடுக்காவிட்டாலும் கிள்ளிக் கொடுக்கலாம் என்ற பழமொழிக்கு ஏற்ப, நாமக்கல்லை சேர்ந்த எஸ்.எம்.ஆர். என்ற பேருந்து நிறுவனம் மகளிருக்கு கட்டணச் சலுகை அளித்திருக்கிறது.
அதாவது ரூ.10 கட்டணம் என்றால் அதில் ரூ.2 மட்டும் செலுத்தி பெண்கள் பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிக்கெட் விலையில் 8 ரூபாயை குறைத்து அது தொடர்பான தகவலை பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் போஸ்டர் அடித்தும் ஒட்டப்பட்டுள்ளது.
அரசுடன் போட்டிபோட்டு இலவச டிக்கெட் தரமுடியாவிட்டாலும் பெண்களுக்கு நியாயமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இது தொடர்பாக நாம் எஸ்.எம்.ஆர். பேருந்து நிறுவனத்தின் மேலாளரிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது;
''நாமக்கல் -மோகனூர் இடையே நாங்கள் பேருந்து சேவை வழங்கி வருகிறோம். பெண்கள் டவுன் பஸ்களில் கட்டணமின்றி பயணிக்கலாம் என அரசு அறிவித்துள்ளதால், நாங்களும் இந்த டிக்கெட் விலை குறைப்பை பெண்களுக்காக செய்திருக்கிறோம். 10 ரூபாய்க்கு பதில் 2 ரூபாய் மட்டும் கொடுத்து பெண்கள் எங்கள் பேருந்தில் பயணிக்கலாம்'' எனக் கூறினார்.