ஒரு கிலோவுக்கு, 27 கி.மீ. மைலேஜ் தரும் பயோகேஸ்.. தமிழகத்தில் ஐஒசி மாஸ் பிளான்
நாமக்கல்: தமிழகத்தில் மேலும் அதிகப்படியான பயோகேஸ் (biogas) உற்பத்தி ஆலைகளை அமைக்க இந்தியன் ஆயில் கழகம் (ஐஓசி) திட்டமிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரத்தில் அமைந்துள்ள பயோ-எரிபொருள் நிரப்பும் மையத்தில், இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குனர் ஜெயதேவன், நேற்று, காணொலி மூலம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போத அவர் கூறுகையில், கூறியதாவது: சென்னை எண்ணூரில் அமைத்துள்ள அலுவலகம் மூலம் இந்தியன் ஆயில் நிறுவனம் ஆண்டுக்கு, ஐந்து மில்லியன் மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்கிறது.
கரும்பு கழிவுகள்
சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களின் வழியாக நிலத்தின் அடியில் எரிவாயுவை எடுத்து செல்லும் வகையில் குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது தற்போது பயோ- காஸ் என்ற உயிரி எரிபொருட்களை உற்பத்தி செய்வதற்கான நடைமுறையை தொடங்கியுள்ளது. இவை முழுக்க முழுக்க வேளாண் கழிவு, கால்நடை சாணம், கோழி எச்சம், கழிவு, கரும்பு கழிவு நகராட்சி திடக்கழிவு மற்றும் சுத்திகரிப்புக் கழிவுகள் போன்றவற்றின் மூலம் பயோ-எரிபொருளாக தயாரிக்கப்படும்.
15மில்லியன் மெட்ரிக் டன்
பயோகேஸ் தயாரிக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதை மத்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது. 2023ம் ஆண்டில், 5,000 ஆலைகளை நாடு முழுவதும் உருவாக்கி, அதில் இருந்து 15 மில்லியன் மெட்ரிக் டன் பயோ-எரிபொருள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளது.
எரிபொருள் கட்டணம்
இந்த திட்டம் வரும்பட்சத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி வெகுவாக குறைந்து விடும். இந்தியன் ஆயில் விற்பனை நிலையங்களில், பயோ-எரிபொருள் கிலோ, 59 ரூபாய், 42 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வாகனங்களில் இதனை நிரப்பினால், ஒரு கிலோவுக்கு, 27 கி.மீ. மைலேஜ் தரும். இதனால் எரிபொருள் கட்டணத்தில் கணிசமான சேமிப்பு கிடைக்கும்.
காற்று மாசு குறையும்
காற்று மாசை குறைக்கவும், இறக்குமதி சார்பு நிலையை குறைப்பதற்காகவும், வேலைவாய்ப்பு உருவாக்கவும், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் ஆதாரம் வழங்கவும், பசுமை எரிபொருள் பயன்பாட்டில் வரவும் மத்திய அரசு இந்த பயோ எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க உள்ளது.
தமிழகத்தில் முதல் ஆலை
நாமக்கல் புதுச்சத்திரம் பகுதியில் பயோகேஸ் எரிபொருள் தயாரிப்பு ஆலை உள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக பயோ எரிபொருள் ஆலை இங்கு தான் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும், 15 டன் பயோ எரிபொருள் உற்பத்தி செய்ய ஒவ்வொரு நாளும் கரும்புக் கழிவு, கோழிக்கழிவுகள் 300 டன் பயன்படுத்தப்படுகிறது. நாமக்கல், சேலம் மாவட்டத்தில், ஐந்து பெட்ரோல் நிலையங்களில் இந்த எரிபொருள் வாகனங்களில் நிரப்புவதற்கு பயன்படுத்தப்படுகிறது. சில தொழிற் கூடங்களுக்கு, தொழிற்கூட எரிபொருளாக வினியோகம் செய்யப்படுகிறது.