ம.நீ.ம.வின் எதிர்காலத்தை கணித்த அமைச்சர்கள்.. மரத்தடி ஜோசியர்களாகும் காலம் விரைவில்- கமல் நக்கல்
Recommended Video
ராசிபுரம்: மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலத்தை கணித்தவர்கள் எல்லாம் மரத்தடி ஜோசியர்களாக மாறப்போகும் காலம் விரைவில் வரப்போகிறது என்று ராசிபுரத்தில் கமல் பேசியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சேலம், நாமக்கல்லில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று முன் தினம் அவர் மேட்டூர் அணையை பார்வையிட்டு அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
ராசிபுரத்தில் பொதுமக்களை நேற்று அவர் சந்தித்து மக்களிடையே பேசினார். அப்போது அவர் பேசுகையில் எனக்கு ராசிபுரம் புதிதல்ல. இங்குள்ள தொண்டர்கள் எங்களுடன் 30-40 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றனர். இங்கு கிட்டதட்ட 3 தலைமுறையைச் சேர்ந்த நற்பணி இயக்கத்தினர் இங்கே இருக்கிறார்கள்.
[எதா இருந்தாலும் சரி.. வெட்டு ஒன்னு.. துண்டு ரெண்டுதான்.. சித்தார்த்துக்கு!]
முதிர்ந்த தோற்றம்
ராசிபுரத்தை இங்குள்ள எங்கள் நற்பணி இயக்கம் மிகச் சிறந்த ரத்ததான வங்கியாக மாற்றியுள்ளது. 18 வயதில் என்னுடன் கைகோர்த்து கொண்டு நற்பணி மன்றத்தில் பணியாற்றிய பலர் இன்று முதிர்ந்த தோற்றத்துடன் அதே உற்சாகத்துடன் பணியாற்றி வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
பெரிய உதாரணம்
மக்கள் நீதி மய்யத்தின் ஜனத்தொகை கூடிக் கொண்டே வருகிறது. ராசிபுரத்தில் நல்லது கெட்டதுகளை நான் கேட்டு தெரிந்து கொண்டே வருகிறேன். 3 ஆண்டுகளாக பாதாள சாக்கடை போடுவதாக கூறி விட்டு மண் உடைய சாலை போட்டுள்ளனர். ஆதார வசதிகளை செய்து கொடுக்க அரசு தவறிவிட்டது என்பதற்கு இதை விட பெரிய உதாரணம் என்ன இருக்கிறது.
பலன் என்னை சுற்றுகிறது
10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. ஆனால் டாஸ்மாக் கடை மட்டும் எல்லா இடங்களிலும் திறந்துள்ளனர். இப்படிப்பட்ட அரசு ஒதுங்கி நிற்க வேண்டும். தமிழகத்திற்கு புதிய மாற்றம் வர வேண்டும் என்பதற்காக புறப்பட்ட புரட்சியின் முனை இங்கே நிற்கிறது. அதன் பலன் என்னை சுற்றித் தெரிகிறது.
வேலையை நீங்கள் செய்யுங்கள்
நான் போகும் இடமெல்லாம் என்னை போலவே கொந்தளிக்கும் மக்களும் கோபப்பட்ட மக்களும் வாய்ப்பு வந்தால் நாங்கள் யார் என்பதை காட்டுவோம் என்று பொறுமையுடன் காத்திருக்கின்றனர். அதற்கான காலமும் வந்துவிட்டது. நாளை நமதே என்ற கோஷம் விரைவில் உண்மையாகும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. அதற்கான வேலையை நீங்கள் செய்ய வேண்டும்.
நெசவு தொழில் பாதிப்பு
இப்படியே விட்டுவிட்டால் தமிழகம் இந்தியாவின் கொள்ளைப்புறமாகிவிடும். பல விதமான வரிகளை விதித்ததால் வியாபாரங்கள் இங்கே முடங்கிக் கிடக்கின்றன. அத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் நெசவு தொழில் முடங்கியுள்ளது.
கடமை
மக்களின் குறைகளை எல்லாம் கேட்டு அதை பட்டியலிட்டு கொண்டிருக்கிறோம். அது செயல்படும் காலம் விரைவில் வரும் என்ற நம்பிக்கையுடன். மக்கள் நீதி மய்யம் சார்பில் செயலி தொடங்கப்பட்டுள்ளது. இங்கே நான் மறுபடியும் வரும் தேவையை நீங்கள் பெருமையுடன் ஏற்படுத்திக் கொடுப்பீர்கள் என நம்புகிறேன். மீண்டும் வருவேன் என்ற வாக்குறுதி உங்களை சந்தோஷப்படுத்துவதற்காக மட்டுமல்ல. வந்தாக வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.
நாளை நமதே
மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலத்தை கணித்தவர்கள் எல்லாம் மரத்தடி ஜோசியர்களாக மாறப்போகின்றனர். அது வெகு தூரத்தில் இல்லை. எங்களால் இயன்ற வரை உங்களது குறைகளை எதிர்கொள்ள இன்று முதல் தொடங்குகிறோம். உங்கள் உதவியுடன் கண்டிப்பாய் நாளை நமதே... என்றார் கமல்ஹாசன்.