உன் வீட்டுக்கு இப்படி கட்டுவியா.. கொந்தளித்த கொங்கு ஈஸ்வரன்.. வியர்த்து விறுவிறுத்த ஒப்பந்ததாரர்..!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்டு வந்த மேல்நிலைநீர்த் தேக்க தொட்டியை ஆய்வு செய்த கொங்கு ஈஸ்வரன் எம்.எல்.ஏ. ஒப்பந்ததாரரை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்து விட்டார்.
ஏற்கனவே நாமகக்கல் எம்.பி.யாக உள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியை சேர்ந்த சின்ராஜ், இது போன்று அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார்.
அடுத்த 24 மணி நேரத்தில்.. 16 மாவட்டங்களில் பலத்த மழை.. வானிலை ஆய்வு மையம் குஷி தகவல்
திருச்செங்கோடு
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன் திருச்செங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது தொகுதிக்குள் ஆய்வு செய்ய செல்லும் அவர், தேவனங்குறிச்சி, வரகூராம்பட்டி, கருப்பக்கவுண்டன் பாளையம் உள்ளிட்ட ஊர்களில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது வரகூராம்பட்டியில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தரமற்ற முறையில் கட்டப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
கொந்தளிப்பு
அந்த புகாரை கேட்டதும், கட்டுமானப் பணி எங்கே நடைபெறுகிறது என கிராமமக்களை கேட்ட ஈஸ்வரன், நேராக அவர்களை அழைத்துக்கொண்டு அந்த இடத்தை பார்வையிடச் சென்றார். அடித்தளம் அமைக்கப்பட்டிருந்ததுடன் காலம் பாக்ஸ் போடப்பட்டு பில்லர் எழுப்பும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 5 நிமிடம் சுற்றி சுற்றி இதை பார்த்த ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வுக்கு கோபம் பீறிட்டு வந்தது. 'இங்க வாப்பா என்னது, இப்படி கட்டி வச்சுருக்கிற, உன் வீட்டுக்கு இப்படித்தான் கட்டுவியா, அதை முதல்ல சொல்லு'' என அங்கிருந்த மேஸ்திரியிடம் கொந்தளித்துவிட்டார்.
ஆக்ரோஷம்
மேலும், ஏன் முறையாக தண்ணீர் விடவில்லை என வினவிய ஈஸ்வரன் எம்.எல்.ஏ., இது சரிபட்டு வராது, மொத்தமாக இடிச்சுட்டு கட்டனும் என ஆக்ரோஷமானார். இந்த தகவலறிந்து அங்கு ஓடி வந்த ஒப்பந்ததாரரிடம், எப்படி கலவை போட்டீர்கள், ஒன்றுக்கு ஒன்ரையா, இல்லை மூன்றா என காங்கிரீட் ரேஷியோ குறித்து கேட்டார். அதற்கு அந்த ஒப்பந்ததாரர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், மேலும் டென்ஷனான ஈஸ்வரன், வேறு எங்கெல்லாம் இவர் வேலை செய்றார், இவ்வளவு தரக்குறைவா வேலை பார்க்கிறார் என அருகில் இருந்த உதவி பொறியாளரை கடிந்துகொண்டார்.
பூச்சு வேலை
பூச்சு வேலை சரியாக இல்லாததை கவனித்த ஈஸ்வரன், ஏன் நாய் கரண்டியது மாதிரி இப்படி இருக்கிறது என சகட்டுமேனிக்கு அங்கிருந்த கட்டுமானப் பணியாளர்களிடம் வினா தொடுத்தார். பிறகு உள்ளூர்காரர் ஒருவர் ஈஸ்வரனை அமைதிப்படுத்தி அங்கிருந்து அழைத்துசென்றார். பிறகு அங்கு கட்டப்பட்டு வந்த கழிவுநீர் கால்வாய் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார். ஈஸ்வரனை பொறுத்தவரை சென்னையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கட்டுமான பணிகள் குறித்த முழு விவரமும் அறிந்து வைத்திருக்கும் அவரிடமே, ஒப்பந்ததாரர் கூறிய தவறான தகவல் தான் அவருக்கு கோபத்தை அதிகப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.