திமுக போராட்டம்... தடுத்து திருப்பி அனுப்பப்பட்ட கட்சியினர்... களத்தில் குதித்த மாவட்டச் செயலாளர்..!
நாமக்கல்: புதிய விவசாய சட்டங்களை கண்டித்து திமுக சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க வந்த கட்சியினர் திருப்பி அனுப்பப்பட்டதை அறிந்து சாதுர்யமாக அவர்களை போராட்டக்களத்திற்கு அழைத்து வந்தார் மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்தும் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய பெருங்குடி மக்களை ஆதரித்தும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் நாமக்கல்லில் நடைபெற்ற திமுக போராட்டத்தில் கூட்டணிக் கட்சியான கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் இணைந்துகொண்டது.
இதையடுத்து போராட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட திமுக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆனால் அமைச்சர் தங்கமணியின் சொந்தமாவட்டம் நாமக்கல் என்பதால் அங்கு திமுக நடத்தும் போராட்டத்திற்கு போலீஸ் தரப்பிலிருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலான இடங்களில் போராட்டக்களத்திற்கு வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து களமிறங்கிய மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார், அவர்களை பல்வேறு வழிகளில் போராட்டக்களத்திற்கு கொண்டு வந்து சேர்த்தார். திமுகவினருடன் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினரும் இணைந்துகொண்டனர்.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தலைவர் ஈஸ்வரன் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டதுடன், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தார்.