நாமக்கல்லில் நாளை உலக கொங்கு தமிழர் மாநாடு… தீவிரமான இறுதிக்கட்ட ஏற்பாடுகள்
நாமக்கல்:கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், உலக கொங்கு தமிழர் மாநாடு நாளை நாமக்கல் பொம்மகுட்டைமேட்டில் நடைபெறுகிறது.
நாமக்கல் - சேலம் நான்கு வழிச்சாலை பொம்மைக்குட்டைமேடு பகுதியில் 2ம் உலக கொங்கு தமிழர் மாநாடு நடைபெறவுள்ளது. கொங்கு மண்டலத்தில் கள்ளக்குறிச்சி தொடங்கி கோவை, ஒசூரில் தொடங்கி திண்டுக்கல் வரை அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் தொடர்பில் இருக்கின்ற, அந்தந்த பகுதிகளின் பிரதிநிதிகள், ஒவ்வொரு பகுதியில் இருந்தும் 10 பேர் வீதம் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
மேலும் சென்னை, பெங்களூரு, மும்பை புது தில்லியிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மாநாட்டு திடலில் 108 நாட்டு மாடுகளை வைத்து கோமாதா பூஜையை கொங்கு மண்டலத்தைச் சார்ந்த 5 ஆதீனங்கள் ஒன்றிணைந்து நடத்த உள்ளனர்.
நடனங்களுக்கு ஏற்பாடுகள்
தொடர்ந்து, மாநாட்டு மேடையில் நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளன. காலை தொடங்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து 4 மணி வரை நடைபெறுகின்றன. இதில் கொங்குநாட்டு பாரம்பரிய, கலாசார நடனங்கள், பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து அரங்கேற உள்ளன. அதற்காக 1,000 கலைஞர்கள் கொங்கு மண்டலத்தின் பல பகுதிகளில் இருந்து வருகின்றனர்.
முக்கியமான தலைவர்கள்
பின்னர், மாலை 4 மணியிலிருந்து கூட்ட நிகழ்ச்சி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். கட்சியின் முக்கியத் தலைவர்கள் பேசுகின்றனர். அதே போல், நாள் முழுவதும் விவசாய கண்காட்சி நடைபெறவுள்ளது.
மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு
மாநாட்டு திடலின் அருகில் உள்ள லஷ்மி திருமண மண்டபத்தில் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. அதேபோல் திருமணமாகாத ஆண், பெண்களுடைய பதிவை செய்வதற்கும் மாநாட்டு திடலில் 3 இடங்களில் ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது.
மாலை 3 மணி வரை உணவு
மதிய உணவு 11 மணி முதல் தொடங்கி மாலை 3 மணி வரை தொடர்ந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகனங்களை நிறுத்த 130 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடலுக்கு எதிரிலும், இரு பக்கங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வருக்கு அழைப்பு
உலக அளவில் தொடர்புகளை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்திருப்பவர்கள், அவர்கள் நாட்டில் என்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை எடுத்துச் சொல்ல இருக்கின்றனர். மாநாட்டுக்கு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த, அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள், அமைச்சர்களுக்கு அழைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.