கட்சிக்கட்டிடம் தொடங்கி நகராட்சி நிலம் வரை... காந்திச்செல்வன் மீது அதிரவைக்கும் புகார்கள்..!
நாமக்கல்: 20 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் நகராட்சிக்காக பொதுமக்களால் நிதி திரட்டி வாங்கப்பட்ட நிலத்தை முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வன் விற்பனை செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதுமட்டுமின்றி திமுக அலுவலகத்திற்காக கட்சி நிதியை கொண்டு வாங்கப்பட்ட கட்டிடத்தை தனது தந்தை மற்றும் சகோதரர் பெயருக்கு மாற்றி வைத்துள்ளதாகவும் உடன்பிறப்புகள் அறிவாலயத்துக்கு தந்தி அனுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே அமைச்சர் தங்கமணியுடன் காந்திச்செல்வன் சிண்டிகேட் அமைத்து செயல்படுவதாக நாமக்கல் திமுகவினர் புகார் வாசித்து வரும் சூழலில், இப்போது எழுந்துள்ள இந்த புதிய புகார்களை திமுக தலைமை சற்று சீரியஸாகவே எடுத்துக்கொண்டுள்ளது.
நகராட்சி தலைவர்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தவர் காந்திச்செல்வன். நாமக்கல் மாவட்ட திமுக செயலாளராக இருந்த இவர் கடந்த 2001 முதல் 2006 வரை நாமக்கல் நகர்மன்றத் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் நாமக்கல் நகராட்சிக்காக கொண்டுவரப்பட்ட புதிய குடிநீர் திட்டத்திற்கு பம்பிங் ஸ்டேஷன் அமைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
பம்பிங் ஸ்டேஷன்
இது மக்கள் பயன்பெறக் கூடிய இடத்தில் அமைய வேண்டும் என்பதற்காக அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் சந்தைப்பேட்டை புதூர் பொதுமக்கள், ராமாபுரம் புதூர் பொதுமக்கள் மற்றும் நாமக்கல் நகர முக்கிய பிரமுகர்கள் மூலம் 7 லட்ச ரூபாய் நிதி திரட்டி காந்திச்செல்வன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து இந்தப் பணத்தின் மூலம் பம்பிங் ஸ்டேஷன் அமைப்பதற்காக அனியாபுரம் உயர்நிலை பள்ளி எதிரே ஐந்தே முக்கால் ஏக்கர் நிலம் வாங்கப்பட்டிருக்கிறது.
சகோதரர் பெயரில் கிரயம்
இதையடுத்து நகராட்சிக்கு நிலத்தை தானமாக தருமாறு கூறிய காந்திச்செல்வன் தனது சகோதரர் மோகன் குமார் என்பவர் பெயரில் கிரயம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே நீர் உந்துநிலையத்தை நகராட்சிக்கு சொந்தமான பழைய இடத்திற்கே மாற்றிவிட்டதாகவும் பொதுமக்கள் தாங்களாக திரட்டி தந்த பணத்தில் வாங்கிய ஐந்தே முக்கால் ஏக்கர் நிலத்தை, நான்கரை கோடிக்கு அண்மையில் காந்திச்செல்வன் விற்றுவிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
விசாரணை
நிலத்தை விற்பனை செய்தது தான் இப்போது வில்லங்கமாகி காந்திச்செல்வனை சுற்றி சுழல்கிறது. இது ஒருபுறமிருக்க நாமக்கல் திருப்பாக்குளம் மற்றும் படிவாசல் ஆகிய இடங்களில் கட்சிக்காக தேர்தல் நிதியை கொண்டு வாங்கப்பட்ட கட்டிடங்களிலும் காந்திச்செல்வன் வில்லங்கம் செய்து வைத்திருப்பதாக திமுக தலைமைக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையே இந்தப் புகார்களை சீரியஸாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது திமுக தலைமை.