திட்டமிட்டப்படி ஜூலை 1 முதல் வேலை நிறுத்தம்.. எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
நாமக்கல்: திட்டமிட்டப்படி வரும் ஜூலை 1-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
நாமக்கலில் நடந்த தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின், 700 லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்து ஜூலை 1 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் பகுதியை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல எல்பிஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் உள்ள எல்பிஜி டேங்கர் லாரிகள், பொதுத்துறை ஆயில் நிறுவனங்களிலிருந்து எரிவாயு சிலிண்டரில் வாயு நிரப்பும் மையங்களுக்கு, சமையல் கியாசை கொண்டு செல்லும் பணியை செய்து வருகின்றன.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுவை மாநிலங்களில் மொத்தம் 4,500 லாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 3, 800 எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கே மீண்டும் வணிக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விடுபட்ட 700 லாரிகளுக்கும் வணிக ஒப்பந்தம் தர வலியுறுத்தியே, ஜூலை 1ம் தேதி எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 31-ல் பழைய டெண்டர் ஒப்பந்தம் முடிந்த நிலையில், புதிய ஒப்பந்தத்தில் அந்தந்த மாநில லாரிகளுக்கு முன்னுரிமை என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற்றிருந்தன. இதனால் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 700 டேங்கர் லாரிகளுக்கு வேலையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டேங்கர் லாரி உரிமையளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி இந்துஸ்தான், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அத்தியாவசிய சேவை சட்டப்படி வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சிக்கலின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எல்பிஜி சிலிண்டர் நிரப்பும் மற்றும் இறக்கி வைக்கப்படும் இடங்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க காவல் துறையினருக்கு உத்தரவிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்துள்ள இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது
இந்நிலையில் வேலைநிறுத்தம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகிகள் பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றம் ஏற்படாததால், திட்டமிட்டபடி ஜூலை 1 முதல் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக கூறியுள்ளனர். ஜூலை 1 முதல் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றம் புதுவை மாநிலங்களில் வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம் என அறிவித்துள்ளனர்.
டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் துவக்கினால் தென்னிந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் சமையல் எரிவாயு விலையும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.