மின்வாரியத்தில் வேலை... இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுக்காதீர்... அமைச்சர் எச்சரிக்கை
நாமக்கல்: மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி இடைத்தரகர்கள் பணம் கேட்டால், அதை நம்பி கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளார் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி.
மேலும், கேங் மேன் பணிக்கு இப்போது ஆட்கள் தேர்வு நடைபெறுவதால், இடைத்தரகர்கள் யாராவது வேலை வாங்கித் தருகிறேன் என அணுகினால் அதனை மக்கள் நம்பக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
மின் வாரிய பணிகளுக்கு முழுக்க, முழுக்க உடற்தகுதியின் அடிப்படையிலேயே ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்.. ஒரே நாளில் கிலோவுக்கு 40 ரூபாய் சரிவு
கேங் மேன் வேலை
மின்சாரத்துறையில் கேங் மேன் பணிக்கு தமிழகம் முழுவதும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். மொத்தமுள்ள 50 ஆயிரம் பணியிடங்களுக்கு 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
ஏமாற்று வேலை
இதனை சாதகமாக பயன்படுத்தும் இடைத்தரகர்கள் சிலர் அமைச்சரை தெரியும், அதிகாரிகளை தெரியும் எனக் கூறி கிராமப்பகுதிகளில் கேங் மேன் பணிக்கு விண்ணப்பித்திருந்தவர்களின் பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணியிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் வினவினர்.
நம்ப வேண்டாம்
மின்வாரியத்தில் கேங் மேன் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும், முழுக்க முழுக்க உடற்தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாகவும் கூறினார். மேலும், இடைத்தரகர்களை நம்பி யாரும் அரசு வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
சாதனைகள்
மேலும், அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கமணி உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக எப்போதும் தயாராக தான் உள்ளது என்றும், தமிழக அரசு செய்த சாதனைகளை கூறி வாக்குகள் கேட்போம் எனவும் தெரிவித்தார்.