இலவச மின்சாரம் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை... அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்
நாமக்கல்: எந்த சூழ்நிலையிலும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மாட்டோம் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என்பதால் விவசாயிகள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். இலவச மின்சாரம் ரத்து என சிலர் பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக சாடினார்.
இந்தியாவில் மின் நுகர்வு மீதான வரி மற்றும் மின் விற்பனை மீதான வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் (Entry 54) உள்ளது. இந்நிலையில் புதிதாக கொண்டுவரப்படும் புதிய மின்சார திருத்தச் சட்டம் மூலம் இலவச மின்சாரம் பறிக்கப்படும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த ஒரு 15 நாட்களுக்கும் மேலாக குற்றஞ்சாட்டி வருகின்றன.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்று கூட எழுதியிருந்தார். அதில், புதிய மின் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். மேலும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் எண்ணத்தை மறந்துவிட வேண்டும் எனக் ஸ்டாலின் கூறியிருந்தார். இதேபோல் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட கட்சிகளும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என போர்க்குரல் உயர்த்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பஸ் எங்கெல்லாம் ஓடும்.. இ பாஸ் எங்ககெல்லாம் தேவை? எதற்கெல்லாம் அனுமதி, தடை.. முழு விவரம்
தமிழகத்தில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படமாட்டாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், கடந்த வாரம் கடலூர் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்பட்ட நிகழ்வு விவசாயிகள் மத்தியில் கலக்கத்தையும், அச்சத்தையும் அளித்தது. இதனிடையே அது தொடர்பாக பேட்டியளித்துள்ள அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் இலவச மின்சாரம் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.