சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை... அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்
நாமக்கல்: வி.கே.சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற தென் மண்டல் எல்.பி.ஜி.லாரி உரிமையாளர்கள் சங்க விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
மேலும், தினகரனை தவிர அமமுகவில் இருந்து யார் வந்தாலும் அதிமுகவில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சசிகலாவுக்கு இடமில்லை
சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வந்து அதிமுக-அமமுகவை இணைத்து செயல்படுவார் என ஆருடங்கள் கூறப்படும் நிலையில் அமைச்சர் தங்கமணி அதனை மறுத்துள்ளார். அதிமுகவில் சசிகலா குடும்பத்தினர் யாருக்கும் இடமில்லை என்பதில் திட்டவட்டமாக உள்ளதாக கூறியுள்ளார்.
மற்ற நிர்வாகிகள் வரலாம்
அமமுகவில் இருந்து டிடிவி தினகரனை தவிர மற்ற யார் வந்தாலும் அவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும், அவர்களுக்கு உரிய கவுரவம் தரப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.
அறிவுறுத்தல்
இதனிடையே தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மின் தடை தொடர்பான புகார்களை முறையாக மின் வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்றும், தாங்களாக பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மின்வாரியம்
பருவமழை காலம் என்பதால் மின்வாரிய அலுவலகம் 24 மணி நேரமும் விழிப்புணர்வுடன் இயங்கி வருவதாகவும், எந்த புயல் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக கூறியுள்ளார்.