2,000 கிலோ மட்டன்! 1,000 கிலோ சிக்கன்! 10,000 அவித்த முட்டை! நாமக்கல்லில் ஹலால் பிரியாணி விருந்து!
நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டன் பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் ராஜேஷ்குமார் எம்.பி.
2,000 கிலோ ஆட்டு இறைச்சி ஹலால் முறையில் வாங்கப்பட்டதுடன், ஆம்பூரிலிருந்து ஸ்பெஷல் மாஸ்டர் வரவழைக்கப்பட்டு மட்டன் பிரியாணி தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல் ஆயிரம் கிலோ சிக்கன் வாங்கப்பட்டு அதை வறுவலாகவும், கிரேவியாகவும் சமைத்து பிரியாணியுடன் பரிமாறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் “தாமரை” மலரும்.. “ஆபரேசன் சவுத் இந்தியா”வை அறிவித்த அமித்ஷா
நாமக்கல் மாநாடு
நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று நடைபெற்றது. அதில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற 8,000 -க்கும் மேற்பட்டோர் தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களுக்கு மட்டன் பிரியாணி விருந்து வைத்து அசத்தி அவர்களை வழியனுப்பி வைத்திருக்கிறார் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார்.
மட்டன் பிரியாணி
மட்டன் பிரியாணிக்காக 2 டன் அதாவது 2,000 கிலோ ஆட்டு இறைச்சி ஹலால் முறையில் கொள்முதல் செய்யப்பட்டது. பிரியாணியுடன் ஆனியன் பச்சடி, சிக்கன் வறுவல் சிலருக்கு, சிக்கன் கிரேவி சிலருக்கு பரிமாறப்பட்டிருக்கிறது. இதேபோல் எல்லோருக்கும் அவித்த முட்டை ஒன்றும் பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள கொடுக்கப்பட்டது. இதற்காக 10,000 முட்டைகள் தனியாக கொள்முதல் செய்யப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை முட்டைக்கு பெயர் போன மாவட்டம் என்பதால் ராஜேஷ்குமாருக்கு இது பெரிதாக தெரியவில்லை.
தயிர் சாதம்
அசைவம் சாப்பிடாதவர்களுக்கு தயிர் சாதம் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு தனியாக சமையல் மாஸ்டர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். நேற்று முன் தினம் முதல் நூற்றுக்கணக்கான சமையல் கலைஞர்களின் கை வண்ணத்தில் எந்தக் குறையுமின்றி விருந்து வைபவம் நாமக்கல்லில் நடைபெற்று முடிந்துள்ளது. வெங்கடாஜலம் என்பவர் இந்தப் பணிகளை கவனித்துக்கொண்டாலும் ஆம்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மாஸ்டர் தான் பிரியாணி சமைத்திருக்கிறார்.
விஐபிக்களுக்கு தனி
இதனிடையே அமைச்சர்கள், மேயர்கள் உள்ளிட்டோருக்கு பிரத்யேக முறையில் இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு மதிய விருந்து அளிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஒரு திருவிழாவையே நடத்தி முடித்திருக்கிறார் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார்.