நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் பலி.. பூஜை செய்தபோது கீழே விழுந்ததால் பரிதாபம்!
Recommended Video
நாமக்கல்: நாமக்கல்லில் ஆஞ்சநேயர் சிலைக்கு மாலை அணிவித்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்த அர்ச்சகர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லில் உள்ள அனுமார் கோயில் வெகு பிரசித்தி பெற்றது. இங்குள்ள ஆஞ்சநேயர் மூலவர் சிலை 5ம் நூற்றாண்டில் வடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த அசாதாரண சம்பவம் நடந்துவிட்டது. அர்ச்சகர் வெங்கடேஷ் என்பவர், பூஜை செய்தபோது, பக்தர் ஒருவர் துளசியால் உருவான மாலையை கொண்டுவந்து வெங்கடேசிடம் கொடுத்துள்ளார்.
நிலை தடுமாற்றம்
அந்த துளசி மாலையை ஆஞ்சநேயருக்கு அணிவிக்க முயன்றபோது, வெங்கடேஷ் எதிர்பாராதவிதமாக, திடீரென நிலைதடுமாறி 8 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.
பலி
இந்த சம்பவத்தில், வெங்கடேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை வெங்கடேஷ் உயிரிழந்தார்.
கோவில் வரலாறு
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. நரசிம்மர் ஆலையம் அருகே 22 அடி உயரத்தில் கைகூப்பிய நிலையில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நரசிம்மர் கோயிலுக்கு கோபுரம் இல்லை என்பதால், தனக்கும் கோபுரம் தேவையில்லை என்று ஆஞ்சநேயர் கூறியதாக கோயில் வரலாறு கூறுகின்றது.
ஏணி அமைப்பு
ஆஞ்சநேயர் சிலை என்பது, பீடத்தில் இருந்து 22 அடியும், பாதத்தில் இருந்து 18 அடியும் உயரம் கொண்டதாகும். ஆஞ்சநேயர் சிலைக்கு, அபிஷேகம், மாலை ஆகியவை அணிவிக்க ஏதுவாக, 8 அடி உயரமுள்ள ஏணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் நின்றபடிதான், வெங்கடேஷ் பூஜை செய்ததாகவும், அப்போதுதான் தடுமாறி கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.