நாமக்கல்லில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்த அர்ச்சகர் தவறி விழுந்து படுகாயம்
Recommended Video
நாமக்கல்: நாமக்கல்லில் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவித்துவிட்டு கீழே இறங்க முயற்சித்த அர்ச்சகர் தவறி விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
நரசிம்மர் - நாமகிரி தாயார் கோயிலுக்கு எதிரில்தான் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.
இவருக்கு கோபுரம் கிடையாது. வெயிலிலும், மழையிலும், காற்றிலும் பொலிவு மாறாமல் காட்சி அளிக்கிறார். நரசிம்மருக்கு கோபுரம் இல்லை. அவர் அமர்ந்திருக்கும் இடம் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டது. அவருக்கு கோபுரம் இல்லாததால், அவரது தாசனான தனக்கும் கோபுரம் தேவையில்லை என்று ஆஞ்சநேயர் கூறியதாவது வரலாற்றுத் தகவல் மூலம் தெரிய வருகிறது.
பீடத்தில் இருந்து 22 அடியும், பாதத்தில் இருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆனது. இந்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்ய 8 அடி உயரத்திலாலான ஏணி போன்ற மேடை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த மேடையில் அர்ச்சகர் ஏறி ஆஞ்சநேயருக்கு அபிஷேகத்தை முடித்துவிட்டு மாலை அணிவித்தார். இவற்றை அணிவித்து விட்டு அவர் கீழே இறங்க முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக வழுக்கி கீழே விழுந்தார்.
சுமார் 8 அடி உயரத்திலிருந்து விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சேலத்தில் உள்ள நியூரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.