மனசாட்சியே இல்லாமல் குழந்தைகளை விற்ற ராசிபுரம் கும்பல்.. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு
நாமக்கல் குழந்தைகள் விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
Recommended Video
நாமக்கல்: விசுவரூபமெடுக்கிறது குழந்தைகள் கடத்தல் விவகாரம்.. குழந்தைகளை மனசாட்சியே இல்லாமல் விற்ற அமுதா & கோவினர் இப்போது கூண்டோடு சிபிசிஐடி விசாரணையில் சிக்கியுள்ளனர்!
ராசிபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நர்ஸ் பேசிய வீடியோ சமீபத்தில் வெளியானது. "ஆண் குழந்தை வேணுமா, பெண் குழந்தை வேணுமா?, கருப்பு கலர் குழந்தை வேணுமா? சிவப்பு நிற குழந்தை வேணுமா" என்று பேரம் பேசும் ஆடியோதான் அது!
முன்பணம் தந்தால் உடனே குழந்தை கிடைக்கும்.. கருப்பு கலர் குழந்தைக்கு ஒரு விலை.. சிவப்பு கலர் குழந்தைக்கு ஒரு விலை என்று அந்த ஆடியோ விவரம் அறிந்ததும் தமிழக மக்கள் அதிர்ந்தனர்.
இதையடுத்து, அமுதா அவரது கணவர் ரவிச்சந்திரன் என 8 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் இப்படி அமுதா குழுவினர் அட்டூழியம் செய்துள்ள நிலையில், வெளிமாநிலங்களிலும் குழந்தைகள் விற்றது, வாங்கியது நடந்திருக்குமோ என்ற விசாரணையும் ஆரம்பமானது. இதனால் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இப்போதைக்கு குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் புரோக்கர்களாக இருந்த பாலாமணி, பாண்டியன் இருவரும் அரசு தரப்பு அப்ரூவர்களாக மாறியிருக்கிறார்களாம். இந்த தகவலை போலீசாரே தெரிவித்துள்ளனர். ஒரு பக்கம் அப்ரூவர்கள்.. மறுபக்கம் சிபிசிஐடி என விஷயம் பெரிதாகி கொண்டே போவதால், இனி மேலும் பல புது புது பகீர் விவரங்கள், தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.