கொல்லிமலை அமுதாவுக்கு கிடைத்தது ஜாமீன்.. 5 முறை நிராகரித்து.. 6வது முறையாக வழங்கியது கோர்ட்
குழந்தை கடத்தல் வழக்கில் நர்ஸ் அமுதா உட்பட 4 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது
நாமக்கல்: கொல்லி மலை நர்ஸ் அமுதாவுக்கு ஒருவழியாக கோர்ட் ஜாமீன் தந்துள்ளது.. 5 முறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், இப்போது நாமக்கல் கோர்ட் ஜாமீன் தந்துள்ளது.
நர்ஸாக இருந்து 2012-ல் ரிடையர் ஆனவர் அமுதா. காட்டூர் காட்டுக்கொட்டாய் வள்ளியம்மாள் நகரைச் சேர்ந்தவர். குழந்தைகளை திருட்டுத்தனமாக விற்பதுதான் இவரது தொழில்.
கறுப்பு, சிவப்பு நிற குழந்தைகளுக்கு ஏற்றபடி ரேட் பேசி விற்று வந்திருக்கிறார். இதற்கு லட்சக்கணக்கில் பணத்தையும் பெற்றிருக்கிறார். இப்படி ரேட் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி தமிழகமே அதிர்ந்து போனது.
இதுசம்பந்தமாக அமுதாவையும், அவருக்கு உதவியாக இருந்த கணவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணையும் நடத்தி சேலம் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கு உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கும் மாறியது. அப்போதுதான் திடுக் தகவல்கள் எல்லாம் வெளியானது. மொத்தமாக இந்த வழக்கில் கொல்லிமலையில் வசித்து வரும் பழங்குடி மக்களின் வறுமையை குறிவைத்துதான் குழந்தை விற்பனை நடந்து வந்திருக்கிறது என்பதும், 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விற்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
இது சம்பந்தமான வழக்கும், நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நர்ஸ் அமுதா உட்பட எல்லாருமே ஜாமீன் கேட்டனர். ஒவ்வொரு முறை ஜாமீன் கேட்கும்போதெல்லாம் கோர்ட் அதை மறுத்துவிட்டது.
எனினும் அமுதா, அவர் கணவர் ரவிச்சந்திரன், முருகேசன் உள்ளிட்டோர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில், அமுதா, ரவிச்சந்திரன், புரோக்கர் லீலா, ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் ஆகிய 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.