இது தான் சுற்றுச்சுவர் கட்டும் லட்சணமா... அதிகாரிகளை கேள்விகளால் திணறவைத்த நாமக்கல் MP சின்ராஜ்..!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பவித்திரம் என்ற ஊரில் அரசுப் பள்ளிச் சுற்றுச்சுவர் தரமற்ற முறையில் கட்டப்படுவதை நேரில் கண்டறிந்து அதிகாரிகளுக்கு டோஸ் விட்டுள்ளார் சின்ராஜ் எம்.பி.
நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஏ.கே.பி. சின்ராஜ். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பாக நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் இவர். தமிழ்நாடு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்து வரும் சின்ராஜ் சற்று கறாரானவர்.
இதனால் ஆரம்பத்தில் இவருக்கும் திமுக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கும் அவ்வளவாக ஒத்துப்போகவில்லை. மணல் விவகாரத்தில் தொடங்கி சகலத்திலும் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. ஒரு கட்டத்தில் சின்ராஜ் தொடர்பான புகார்களை அறிவாலயத்திற்கு கொண்டு சென்றார் மூர்த்தி எம்.எல்.ஏ.
எதிலும் மிக கறாரான சின்ராஜ் எம்.பி. தனது தொகுதி வளர்ச்சிப் பணிகள் என வந்துவிட்டால் கண்ணில் எண்ணெய் விட்டு அதனை ஆய்வு செய்து அதிகாரிகளை ஒரு வழி செய்துவிடுவார். இந்நிலையில் கொரோனாவுக்கு முன் தாம் ஒதுக்கிய நிதியை கொண்டு நாமக்கல் மாவட்டம் பவித்திரத்தில் கட்டப்பட்டு வரும் அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் தரமற்ற முறையில் உள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து இன்று திடீரென அங்கு சென்ற சின்ராஜ் எம்.பி. செங்கல் வைத்து பூசப்பட்டிருந்த சுவற்றை தனது கையால் தள்ளினார். செங்கற்கள் பெயர்ந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது தான் சுற்றுச்சுவர் கட்டும் லட்சணமா என அங்கிருந்த அதிகாரிகளையும், ஒப்பந்ததாரையும் கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டார்..
சென்னையில் 1250 பேருக்கு கொரோனா- கோவை, சேலத்தில் தொடரும் தீவிர பாதிப்பு
இன்னும் முழுமையாக பூச்சு வேலைகள் முடியாத நிலையில் சின்ராஜ் எம்.பி.ஆய்வு செய்ய வந்ததாகவும், இன்னும் மேல் பூச்சு பணிகள் இருப்பதாகவும் ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சுற்றுச்சுவர் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு ரூ.38 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.