ஆர்எஸ்எஸ் மீது ராகுல் காந்தி நேரடி அட்டாக்.. ஆனால்.. தப்பா மொழி பெயர்த்துட்டாரே பீட்டர் அல்போன்ஸ்!
நாமக்கல்: காங்கிரஸ் கட்சிக்கு, தமிழகத்தில், மட்டும் ஏன்தான் இப்படி நடக்கிறதோ தெரியவில்லை.. அவ்வப்போது மொழிபெயர்ப்பாளர்களால் சர்ச்சையும், சிக்கலும் ஏற்படுகிறது.
Recommended Video
கடந்த லோக்சபா தேர்தலின் போது ராகுல் காந்திக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டார் காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு. அப்போது ராகுல்காந்தி எதையோ சொல்ல ..தங்கபாலு அவர் இஷ்டத்துக்கு எதையோ மொழி பெயர்த்து பேச.. சமூக வலைத்தளங்கள் மூலம் கேலியும் கிண்டலும் ஏற்பட்டது.
ஒன்றல்ல, இரண்டல்ல, பல கூட்டங்களில் தங்கபாலு இப்படித்தான் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
பீட்டர் அல்போன்ஸ்
இதோ, இப்போது, மறுபடியும் ஒருமுறை ராகுல்காந்தி பேசியதை தமிழில் மொழிபெயர்க்கும்போது சர்ச்சை வெடித்துள்ளது. இந்த முறை மொழிபெயர்த்தவர் காங்கிரஸ் மூத்த தலைவரும், நல்ல கல்வியாளருமான பீட்டர் அல்போன்ஸ். தாராபுரத்தில் நடந்த இந்த 'சம்பவம்' சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
தாராபுரம் பொதுக் கூட்டம்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி உள்ளார் மூத்த தலைவர் ராகுல் காந்தி. நேற்று தாராபுரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றினார். அவர் ஆங்கிலத்தில் பேச.. அதை தமிழில் மொழிபெயர்க்கும் பணியை காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்து கொண்டிருந்தார்.
#WATCH | We'll not allow Narendra Modi to destroy the foundation of India...He doesn't understand that only Tamil people can decide the future of Tamil Nadu. 'Knickerwallahs' from Nagpur can never ever decide future of the state: Congress' Rahul Gandhi in Dharapuram, Tamil Nadu pic.twitter.com/KFDaXKeTMG
— ANI (@ANI) January 24, 2021
தமிழகத்தை கட்டுப்படுத்த முடியாது
ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி செயல்பாடுகளால் இந்த நாட்டின் அஸ்திவாரம் அசைக்கப்படுவதற்கு, நாங்கள் விடமாட்டோம். தமிழக அரசை மிரட்டி கட்டுப்படுத்த முடியும் என்று நரேந்திர மோடி நினைக்கிறார். இதன் மூலமாக, 7 கோடி தமிழக மக்களையும், கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறார். ஆனால் அவருக்குப் புரியவில்லை.. தமிழக மக்கள்தான், மாநில எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள்.
#WATCH | We'll not allow Narendra Modi to destroy the foundation of India...He doesn't understand that only Tamil people can decide the future of Tamil Nadu. 'Knickerwallahs' from Nagpur can never ever decide future of the state: Congress' Rahul Gandhi in Dharapuram, Tamil Nadu pic.twitter.com/KFDaXKeTMG
— ANI (@ANI) January 24, 2021
நிக்கர்வாலா
நாக்பூரில் உள்ள நிக்கர்வாலாக்கள் (கால் சட்டைக்காரர்கள்) எந்த காலத்திலும், எப்போதும் தமிழக மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கால் சட்டை அணிவது பாரம்பரியம் என்பதால் ராகுல்காந்தி மறைமுகமாக நாக்பூரில் உள்ள நிக்கர்வாலா என்று தெரிவித்தார். ஆனால் இங்குதான் பீட்டர் அல்போன்ஸ் தப்பாக புரிந்து கொண்டு மொழி பெயர்த்தார்.
சாராய வியாபாரிகள்
நிக்கர்வாலா என்பது பீட்டர் அல்போன்ஸ் காதுகளில் லிக்கர்வாலா என கேட்டிருக்கும்போல. "நாக்பூரிலுள்ள சாராய வியாபாரிகள், எந்த காலத்திலும், எப்போதும் தமிழக மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது" என்றாரே பார்க்கலாம். இது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறது. ராகுல் காந்தி மிகத் தீவிரமாக வலதுசாரி சித்தாந்தங்களை எதிர்த்து வருகிறார். இதுபோன்ற மொழிபெயர்ப்புகள் அவருக்குத்தான் கேலியும் கிண்டலும் பெற்றுத் தரும் என்கிறார்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள்.