கத்திமுனையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்.. சினிமாவை மிஞ்சிய சேஸிங்.. சுட்டுப் பிடித்த போலீஸ்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தொழிலதிபர் ஒருவரை 4 பேர் கடத்திய நிலையில் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீஸார் அவரை பத்திரமாக மீட்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஆப்பக்கூடலைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சக்திவேல். கார் விற்பனை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை 6 மணிக்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது 4 பேர் கொண்ட மர்மகும்பல் அவரை கத்தி முனையில் காரில் கடத்தி சென்றது. காலையில் வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் கவலை அடைந்த அவரது உறவினர்கள் தேடினர். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை.
போலீஸார்
இதையடுத்து சக்திவேலின் செல்போனில் இருந்து நேற்று மாலை அவரது குடும்பத்தினருக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் சக்திவேலை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் தாருங்கள் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சக்திவேலின் குடும்பத்தினர் போலீஸாரிடம் கூறினர்.
சாதாரண உடையில்
போலீஸார் அறிவுரைப்படி கடத்தல் கும்பலிடம் பணம் தர சக்திவேல் குடும்பத்தினர் ஒப்புக் கொண்டனர். சேலம் மாவட்ட எல்லை அருகே உள்ள தனியார் மருத்துவமனை அருகே பணத்துடன் வருமாறு மர்மகும்பல் சக்திவேல் குடும்பத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சேலம் அயோத்தியாபட்டினம் போலீஸார் மப்டியில் காரில் அமர்ந்திருந்தனர்.
கார் கடத்தல்
அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அந்த தனியார் மருத்துவமனைக்கு வந்தது, போலீஸார் பணம் கொடுக்க முயன்ற போது புரிந்து கொண்ட கும்பல் அவர்களை தள்ளிவிட்டுவிட்டு தப்பியோடியது. இதையடுத்து அந்த கும்பலை காரில் துரத்தினர். சேலம் மாவட்டம் அரியானூர் வழியாக ஆட்டையாம்பட்டியை கடந்து நாமக்கல் மாவட்டம் அலவாய்ப்பட்டியில் அதிவேகமாக நுழைந்த கடத்தல் கும்பலின் கார் மண்ணில் சிக்கியது.
மர்ம கும்பல்
அப்போது அந்த 4 பேரும் பயங்கர ஆயுதங்களுடன் நின்றனர். அப்போது இருவர் போலீஸாரை சுற்றி வளைத்தனர். மீதமுள்ள இருவர் போலீஸார் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றனர். அப்போது போலீஸார் வாகனத்தின் கார் கண்ணாடியை சுட்டனர். இதையடுத்து அவர்கள் ஏரி பகுதியில் தப்பியோடினர். பொதுமக்களும் போலீஸாருடன் சேர்ந்து மர்மகும்பலை தேடினர்.
அதிர்ச்சி
நாமக்கல் மாவட்ட அதிரடிப்படை போலீசாரும் ஏரியில் பதுங்கிய குற்றவாளிகளைத் தேடினர். இதற்கிடையே மர்ம கும்பல், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே தொழிலதிபர் சக்திவேலை காரில் இருந்து தள்ளி விட்டு தப்பியோடியது. சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.