நீடிக்கும் மர்மம்.. திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை ஏன்.. 2-வது நாளாக தீவிர விசாரணை!
நாமக்கல்: திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய மர்மமாகவே உள்ளது. இந்த தற்கொலை சம்பந்தமாக நாமக்கல் போலீசார் 2-வது நாளாக விசாரணையில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
பரமத்திவேலூர் அருகே உள்ள செங்கப்பள்ளியை சேர்ந்தவர் டாக்டர் ஆனந்த். இவருக்கு 50 வயதாகிறது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார். மனைவி தமிழ்செல்வி ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார். 17 வயதில் அபர்ணா என்ற மகள் பிளஸ் 2 படிக்கிறார்.
பரமத்திவேலூர் பேட்டையில் ஈஎன்டி ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். ஆஸ்பத்திரி மேல்மாடியில் குடும்பத்தினர் உள்ளனர். நேற்று செங்கப்பள்ளியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்ற ஆனந்த், மனைவி தமிழ்செல்விக்கு போன் போட்டு, நான் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்றார்.
காரை எடு
அந்த நேரம் மனைவியோ கோயம்புத்தூரில் இருக்கவும், அதிர்ச்சியில் எதுவும் புரியாமல் தவித்தார். உடனே ஊரில் இருந்த சொந்தக்காரர் செல்வம் என்பவரை உடனே தோட்டத்துக்கு போய் என்ன ஆச்சு என்று பார்க்கும்படி சொன்னார். செல்வமும், தோட்டத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது, "வீட்டுக்கு போகலாம் காரை எடு" என்றார் டாக்டர்.
தற்கொலை
செல்வமும் காரை யு-டர்ன் போட்டு திரும்புவதற்குள், திடீரென கையில் இருந்த துப்பாக்கியால் தாடையில் வைத்து சுட்டுக்கொண்டார் டாக்டர் ஆனந்த். அங்கேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அலறிய செல்வம், உடனடியாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் சொல்ல, போலீஸ் விசாரணையும் ஆரம்பமானது. ஆனால் டாக்டர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை.
திட்டமிட்ட தற்கொலை
இவருக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளது. ஆஸ்பத்திரி தவிர, பெட்ரோல் பங்க், அரிசி மண்டி வைத்திருக்கிறார். இதுபோக, நிலபுலன்களும் எக்கச்சக்கமாக உள்ளன. குடிப்பழக்கம் இருப்பதால், வீட்டில் நிறைய தகராறு வந்து போயுள்ளது. ஆனால் தற்கொலை செய்து கொள்வதை முன்கூட்டியே பிளான் பண்ணிதான் வைத்திருந்திருக்கிறார் ஆனந்த்.
சம்பளம்
அதனால்தான் நேற்று திடீரென ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வரும் நர்ஸ்களை அழைத்து முன்கூட்டியே சம்பளம் தந்துள்ளார். அதுவும் ஆயிரம் ரூபாய் அதிகமாகவே தந்துள்ளார். ஏன், இப்பவே சம்பளம் தர்றீங்க என்று ஊழியர்கள் கேட்டதற்கு, வெளியூர் போறேன், வர லேட்டாகும் என்று சொல்லி உள்ளார்.
விசாரணை
சொத்து அதிகமாக இருப்பதால், யாராவது டாக்டரை மிரட்டி வந்தார்களா, அல்லது வேறு யாருடனாவது டாக்டருக்கு தொடர்பு உள்ளதா, அல்லது கடன் பிரச்சனை ஏதாவதில் சிக்கி இருந்தாரா என்று தெரியவில்லை. எனினும் 2-வது நாளாக தீவிர விசாரணை நடத்தியும் உறுதியான காரணம் தெரியவில்லை என்பதால் தொடர் விசாரணை நடந்து வருகிறது.