30 வருஷமா தொழில் செய்றேன்... அதிர வைக்கும் குழந்தை விற்கும் ராசிபுரம் அமுதாவின் ஆடியோ பேச்சு
Recommended Video
நாமக்கல்: ராசிபுரத்தில் குழந்தைகளை விற்றுவந்த ஒய்வு பெற்ற செவிலியர் தான் 30 வருடங்களாக இந்த தொழில் செய்து வருவதாக பேசும் அதிர்ச்சி ஆடியோ வைரலாகி வருகிறது.
குழந்தைகள் இல்லாத தம்பதிகள் தத்தெடுப்பதற்கு நமது நாட்டில் உள்ள சட்டத்தில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. இதனாலேயே பலரால் சட்டப்பூர்வமாக தத்தெடுப்பதில் பல தடைகளைச் சந்திக்கின்றனர். இதுவே குழந்தைக் கடத்தல்காரர்களுக்கு வசதியாகப் போய் விட்டது.
இந்நிலையில் ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை வாங்குபவர்களுக்கு பிறந்த குழந்தை போல் பிறப்பு சான்றிதழுடன் ஒய்வு பெற்ற செவிலியர் அமுதா என்பவர் ராசிபுரத்தில் விற்று வந்தது தெரியவந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை விற்ற செவிலியர் அமுதாவுடன், தர்மபுரியைச் சேர்ந்த ஒருவர் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ள தகவல்களும் அனைவரையும் அதிர வைத்துள்ளது. அந்த ஆடியோவில் உள்ள உரையாடல் விவரம்:
தர்மபுரி சதீஷ்: ஹலோ நான் தர்மபுரியில் இருந்து பேசறேன் மேடம், அமுதாவா?
அமுதா: ஆமாம் நான் அமுதா தான் பேசறேன் சொல்லுங்க
தர்மபுரி சதீஷ்: 15 நாள்களுக்கு முன்னாடி ராசிபுரத்தில் இருந்து என்னோட ரிலேசன் உங்ககிட்ட பேசியிருந்தாங்க. வீட்ல ஒரு துக்கம், அதனாலதான் வரமுடியாம போச்சு
அமுதா: நீங்க போன் போட்டு சொல்லியிருக்கலாம்ல சார், நேற்றுதான் கொடுத்துவிட்டேன். நீங்க ஒரே ஒரு போன் மட்டும் பண்ணி இருந்தா போதுமே சார். நான் நிறுத்தி இருப்பேன்.
தர்மபுரி சதீஷ்: உறவுக்காரர் இறந்துபோனதால வரமுடியல. இப்பதான் முடிஞ்சது.
அமுதா: உங்களுக்கு எந்த மாதிரி வேணும்ணு சொல்லுங்க
தர்மபுரி சதீஷ்: பெண்னோ பையனோ எனக்கு கொடுத்தா போதும்.
அமுதா: சரிங்க சார் எப்ப வர்றீங்க என்னை பார்க்க,
தர்மபுரி சதீஷ்: நீங்க எவ்வளவுன்ணு சொன்னீங்க அப்படீன்னா ரெடிபண்ணி கொண்டு வருவேன்.
அமுதா: நீங்க அட்வான்ஸ் மாதிரி ஒரு அமவுண்ட் ரெடி பண்ணி வைங்க, என்னை ராசிபுரத்துல வந்து பாருங்க.
தர்மபுரி சதீஷ்: நீங்க அந்த குழந்தையை எவ்வளவுக்கு வித்தீங்க
அமுதா: அந்த குழந்தையை 2.75 லட்சத்துக்கு விற்றோம். இதற்கு திருச்சியில் பத்தரம் எழுதிகிட்டு இருக்கோம். கருப்பா இருந்ததால் அந்த ரேட்டு. ஆண் குழந்தை கலரா இருந்தா 4 முதல் 4.25 லட்சம் ரூபாக்கு விற்போம். நீங்க 10 நாட்கள் வெயிட் பண்றதா இருந்தா அட்வான்ஸ் கொடுத்திட்டு போங்க. மீதி குழந்தை கிடைக்கிறப்ப கொடுஙக. உங்களுக்கு குழந்தை ஆரோக்கியமாக வேண்டுமா அல்லது அழகாத்தான் வேண்டுமா?
தர்மபுரி சதீஷ்: குழந்தை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வேண்டும். எவ்வளவு அமவுண்ட் தேவைப்படும்.
அமுதா: நீங்க அட்வான்ஸ் அமவுண்ட் 30 ஆயிரம் போடுங்க போதும். பெண் குழந்தை என்றால் 2.70 லட்சம் கொடுக்கணும். நல்ல அழகாக 3 கிலோவுக்கு மேல குழந்தை இருந்தா 3 லட்சம் வரை கேட்பாங்க. பேரம் பேசக்கூடாது. உங்களுக்கு பிறந்த மாதிரி முனிசிபாலிட்டில பிறந்த சான்றிதழை 25 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் பண்ணி கொடுத்திடுவேன்.
தர்மபுரி சதீஷ்: ராசிபுரத்துலயே பிறந்த மாதிரி பண்ணிக்கொடுத்திருவீங்களா?
அமுதா: ஆமாங்க, நீங்க இங்க வந்து பிரசவம் பார்த்த மாதிரியும், உங்களுக்கு இங்க குழந்தை பிறந்த மாதிரியும் பண்ணி கொடுத்திருவேன். அதுக்கு 70 ஆயிரம் ரூபாய் வேணும். அதெல்லாம் பண்றது முனிசிபாலிட்டி ஆளுங்க. உங்களுக்கு முடிச்சாமாதிரி பண்ணி தாரேன். இவ்வாறு அந்த உரையாடல் நீள்கிறது.