20 ஏக்கர் கொடுத்தும் விடியவில்லை.. மேலும் சொத்து கேட்டு பெற்றோரை கூலிப்படை ஏவி வெட்டிய கொடூர மகன்!
நாமக்கல்: நாமக்கல் அருகே சொத்துத் தகராறில் பெற்ற தாய்- தந்தையை வெட்டி விட்டு ஏரி அருகே அவர்களை வீசி சென்ற கொடூரம் நடந்துள்ளது.
மல்லசமுத்திரம் மோர்பாளையத்தைச் சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி சரசு. இவர்களுக்கு பழனிவேல் என்ற மகனும் சுமதி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சபாபதி தான் சேர்த்து வைத்த 27 ஏக்கர் நிலத்தில் 20 ஏக்கரை மகனுக்கும் 7 ஏக்கரை மகளும் எழுதி வைத்தார். ஆனால் அப்படியும் விடியாமல் சகோதரிக்கு கொடுத்த 7 ஏக்கரையும் தனக்கே மீண்டும் தர வேண்டும் என பெற்றோரை பழனிவேல் தொல்லை செய்தது தெரியவந்தது.
இதற்கு அவர்கள் சம்மதிக்காததால் சொந்த வீட்டை அவர்களிடம் இருந்து பறித்து கொண்டு விரட்டியடித்துள்ளார். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வீட்டை மீட்டுள்ளனர். சொத்து கொடுக்காததாலும், வீட்டை மீட்டதாலும் பழனிவேல் கடும் கோபமடைந்தார்.
இதையடுத்து கடந்த 25-ஆம் தேதி பெற்றோரை கூலிப்படை ஏவி கடத்தி சென்ற பழனிவேல் அவர்களை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினார். இதையடுத்து கோனேரிப்பட்டி ஏரி அருகே சபாபதி மற்றும் சரசுவை அந்த கும்பல் வீசிவிட்டு சென்றது.
இந்நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தம்பதியை மீட்டு ராசிபுரம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக பழனிவேல் உள்ளிட்ட கூலிப்படையினரை போலீஸார் தேடி வருகின்றனர்.