நாமக்கல்லில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ சட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் கைது
நாமக்கல்லில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் 10 ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்சிப்பதாக மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து ஆசிரியருக்கு ஆதரவாக சக ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நிலையில் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மதிவாணன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவர் மீது பள்ளியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி மற்றும் அவரது பெற்றோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பாலியல் புகார் அளித்தனர். அந்த மனுவில் ஆசிரியர் மதிவாணன் தன்னிடம் தவறான முறையில் நடக்க முயற்சிக்கிறார். அவர் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவி எழுப்பியுள்ள புகார் உண்மையில்லை. உள்நோக்கத்தோடு புகார் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த சக ஆசிரியர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் பணியாற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று மாலை பள்ளி வேலை நேரம் முடிந்ததும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் இரவு 8 மணியைக் கடந்தும் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நாமக்கல் போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக ஆசிரியர் மதிவாணனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications