ஊரடங்கால் பல மாநிலங்களில் உணவுக்கு தவிக்கும் தமிழக போர்வெல் லாரி தொழிலாளர்கள்
நாமக்கல்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு சென்ற போர்வெல் லாரி தொழிலாளர்கள் உணவுக்கு தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
இதனால் இது குறித்து கவனத்தில் கொண்டு தமிழக அரசு உரிய உதவிகளை செய்துகொடுக்க வேண்டும் என தமிழக போர்வெல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை காவல்துறையினர் காட்டுமிராண்டி தனமாக தாக்குவதாகவும் இந்த போக்கை அவர்கள் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74
போர்வெல் லாரிகள்
நாமக்கல், சேலம், ஈரோடு, ஆகிய மூன்று மாவட்டங்களிலும் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பிரதான தொழிலாக இருந்து வருவது லாரி தொழில். அதிலும் சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் போன்ற பகுதிகளில் மட்டும் ஆயிரக்கணக்கான போர்வெல் லாரிகள் வைத்து இயக்கப்படுகின்றன. இந்த போர்வெல் லாரிகள் அனைத்தும் தமிழகம் மட்டுமின்றி ஜார்கண்ட், பீகார், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், என பல மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு போர்வெல் (ஆழ்துளை கிணறு) அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
12 தொழிலாளர்கள்
தமிழகத்தில் சுமார் 15,000 போர்வெல் லாரிகள் உள்ள நிலையில் அதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளன. புரோக்கர்களுக்கு கமிஷன் அடிப்படையில் ஆங்காங்கு உள்ள பெட்ரோல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு போர்வெல் அமைத்து கொடுக்கப்படுகின்றன. ஒரு லாரிக்கு குறைந்தபட்சம் 12 தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவர். டிரில்லர், உதவியாளர், டிரைவர், மேனேஜர் என பல படி நிலைகளில் அவர்களுக்கு ஊதியம் அளிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட இடம் தான் என்றில்லாமல் எங்கெங்கு ஆழ்துளை கிணறு அமைத்துக் கொடுக்கும் பணி கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஒரு நாடோடியை போல் இந்த தொழிலாளர்களும் செல்வார்கள்.
வேதனை
இதனிடையே திருச்செங்கோடு போர்வெல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கந்தசாமியை தொடர்பு கொண்டு பேசியபோது, ''தற்போதைய நிலவரப்படி தமிழகத்தை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளிமாநிலங்களில் சிக்கி தவித்து வருகின்றனர். ஒரு சில லாரிகளில் மட்டும் ஒரு வாரத்திற்கு தேவையான சமையல் பொருட்கள் இருப்பு இருக்கின்றன. மற்றபடி பெரும்பாலான போர்வெல் லாரிகளில் அதுபோன்று எந்த பொருட்களும் இருப்பு இல்லாததால் எங்கள் லாரி தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் பரிதவித்து வருகின்றனர்''.
வங்கியில்லை
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ''ஓட்டுநர்களுக்கு பணம் அனுப்பி வைத்தால் கூட அந்த பணத்தை அவர்களால் எடுக்க முடியாத சூழலில், பல குக்கிராமங்களிலும், சாலையோரங்களிலும் இருக்கின்றனர். மேலும், தமிழகத்தை போல் மற்ற மாநிலங்களில் நிலைமை இல்லை, வெளிமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அவலம் நிலவுவதால் லாரியை விட்டு யாரும் வெளியே செல்ல முடியாத சூழல் உள்ளது. இதனால் தமிழக அரசு இது குறித்து கவனத்தில் கொண்டு பிறமாநில அரசுகளுடன் பேசி தமிழக தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்தார்.