ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை.. ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் கைது
Recommended Video
நாமக்கல்: ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளனர். பணத்துக்காக குழந்தைகளை விற்பனை செய்து வந்ததாக அமுதாவிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
குழந்தைகள் விற்பனை குறித்து புகார் எழுந்த நிலையில், விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டார். பணத்திற்கு குழந்தைகளை விற்கும் ஓய்வு பெற்ற செவிலியரின் ஆடியோ வெளியானதை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், தவறான உறவில் பிறந்த குழந்தைகள் ஆகியவற்றை வாங்கி வந்து, குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்யும் சம்பவம் வெளிப்படையாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கும்பலுக்கு, விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் இடைத்தரகராக செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
குழந்தைகளின் அழகான தோற்றம், கலர் ஆகியவற்றை வைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. ஆண் குழந்தைகளை 4 லட்ச ரூபாய்க்கும், பெண் குழந்தைகளை 3 லட்ச ரூபாய்க்கும் விற்பதாக கூறப்படுகிறது.
ஆடியோ வைரல்
விற்பனை செய்யப்படும் குழந்தைக்கு நாமக்கல் நகராட்சியில் பிறப்பு சான்றிதழும் வாங்கித் தரப்படுவது தெரியவந்துள்ளது. இந்த கும்பல் வெளி மாநிலங்களிலிருந்து குழந்தைகளை திருடி வந்து விற்பனை செய்வதாகவும் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில், குழந்தை விற்பனை கும்பலுக்கு இடைத்தரகராக செயல்படும் பெண், குழந்தை இல்லாத தம்பதியிடம் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
30 ஆண்டுகளாக விற்பனை
அதில், ஓய்வு பெற்ற நர்ஸ் அமுதா என்பவர் பேசுகையில், ஆண்டவன் அருளால் எந்த பிரச்சனையும் இல்லாமல், கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி கொடுத்து வருகிறேன். இதன் காரணமாக, நர்ஸ் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். முன் பணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்தால் தான் குழந்தையை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என்று கூறுகிறார்.
பிறப்பு சான்றிதழ்
குழந்தை வந்ததும் நேரில் வந்து பார்த்து எடுத்துச் செல்லலாம். குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்றாலும் ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கி கொடுக்கிறேன் என்றும் நர்ஸ் அமுதா கூறுகிறார். இந்த ஆடியோ பேச்சு ராசிபுரம் பகுதியில் வைரலாக பரவியது.
நர்ஸ் அமுதா கைது
இதையடுத்து ராசிபுரம் மகளிர் போலீசார் ஓய்வு பெற்ற நர்சிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பல்வேறு உண்மைகள் மறைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், குழந்தைகள் விற்பனை தொடர்பாக முதல் கட்ட விசாரணைக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
கணவன், மனைவி கைது
இதனைத்தொடர்ந்து, குழந்தை விற்பனையில் அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை கடத்தல் விவகாரத்தில் இன்னும் பலர் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என சந்தேகம் தெரிவித்துள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், 3 குழந்தைகளையும் ஓமலூர் மற்றும் கொல்லிமலையில் விற்பனை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டனர் என்றும் கூறினார்.