மாணவிகளை ஆபாச படம் எடுத்த கும்பல்.. ஆயிரக்கணக்கில் திரண்டு வந்த பெற்றோர், உறவினர்கள்!
நாமக்கல் அரசு பள்ளி முன்பு பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
நாமக்கல்: மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்ததாக கூறி அரசுப் பள்ளியில் உறவினர்கள் ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்லை அடுத்த பள்ளிபாளையத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 1300க்கும் மேற்பட்டவர்கள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.
ஆனால் பள்ளிக்கு சுற்றுசுவர் இல்லை என்றும் இதனால் கழிவறைக்கு செல்லும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பெற்றோர்கள் நீண்ட நாட்களாக சொல்லி வருகிறார்கள்.
முகமூடி நபர்கள்
இந்நிலையில், மாணவிகள் கழிவறைக்கு சென்றபோது 4 பேர் முகமூடி அணிந்து திடுதிப்பென்று உள்ளே புகுந்ததாகவும், பமாணவிகளின் ஆடைகளை கிழித்து செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மயங்கி விழுந்தனர்
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அலறி கூச்சலிட்டு உள்ளனர். ஆனால் அந்த சமூகவிரோதிகள் கத்தியை காட்டி மிரட்டியதால், மாணவிகள் அங்கேயே மயங்கி விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது.
முற்றுகை
இந்த சம்பவத்தினால் பீதியில் உறைந்த மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் கதறி முறையிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என பள்ளியின் முன்பு திரண்டு, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற 4 பேர் கொண்ட முகமூடி கும்பலை கைது செய்ய கோரியும்,
பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்களையும் எழுப்பினர். ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால், பள்ளிபாளையம் பகுதியில் அதிர்ச்சி கலந்த பரபரப்பு சூழ்ந்தது.
சுற்றுசுவர்
தகவலறிந்து வந்த போலீசார், பள்ளிக்கூடத்துக்கு சுற்றுசுவர் எழுப்புவதோடு கண்காணிப்பு கேமரா பொருத்தி மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதி சொன்னதையடுத்து நிலைமை கட்டுக்குள் வந்தது.