சிலம்பொலி செல்லப்பனுக்கு மணிமண்டபம்.. யாருக்கு மனசு வரும்.. ரூ.50 லட்சம் மதிப்பு நிலம் தந்த பெண்..!
நாமக்கல்: மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனுக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் மணி மண்டபம் அமைப்பதற்காக ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை இலவசமாக கொடுத்துள்ளார் பெண் ஒருவர்.
தமிழறிஞரான சிலம்பொலி செல்லப்பன் தன் வாழ்நாளின் இறுதிமூச்சு வரை தமிழ் வளர்ச்சிக்காக அருந்தொண்டு ஆற்றியவர். உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர், தமிழ் வளர்ச்சிக் கழக இயக்குநர் எனப் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி என மூன்று முதலமைச்சர்களுக்கும் நெருக்கமானவர், அவர்கள் மூவர் ஆட்சியிலும் தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டவர். சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கிய தேன் உள்ளிட்ட எண்ணற்ற புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
இப்படி பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான சிலம்பொலி செல்லப்பன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானார். இதையடுத்து அவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்ட சிவியம்பாளையத்தில் மணிமண்டபம் அமைக்குமாறு கிராமமக்களும், தமிழ் ஆர்வலர்களும் அமைச்சர் தங்கமணி மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
ஆனால், அந்தக் கோரிக்கை நிறைவேறுவது போல் தெரியவில்லை என உணர்ந்த அவர்கள், சிலம்பொலி செல்லப்பனுக்கு தாங்களே இணைந்து மணிமண்டபம் எழுப்ப திட்டமிட்டனர். இந்நிலையில் மணிமண்டபம் அமையவுள்ள நிலத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் என்ற போதிலும், அதனை இலவசமாக கொடுத்திருக்கிறார் பூங்கோதை செல்லத்துரை என்ற பெண்.
பாஜக மீது அம்புட்டு கோபம்.. இடைவிடாமல் ஆளுநரை வெளுத்து வாங்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
மேலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிறுவனர் ஈஸ்வரன் மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் சில லட்சங்கள் இதற்காக நன்கொடை வழங்கியுள்ளனர். கடந்த வாரம் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் விரைவில் கட்டிட கட்டுமானப் பணிகள் தொடங்கவிருக்கின்றன.