நாமக்கல்லில் விவசாய நிலத்தில் திடீரென விழுந்த இடி.. பெருக்கெடுத்து ஓடும் ஊற்று நீரால் பரபரப்பு
நாமக்கல்: நாமக்கல்லில் விவசாய நிலத்தில் இடி விழுந்த இடத்தில் நீர் ஊற்று போல் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று மழை பெய்தது. சேந்தமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இங்கு 137 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் சேந்தமங்கலம் பேரூராட்சிக்கு உள்பட்ட ஜங்களாபுரத்தில் நேற்று நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் சரவணன் என்பவரது விவசாய நிலத்தில் இடி விழுந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அந்த நிலத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து வயல் முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கியது. அங்கிருந்து வழிந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
அரசு தொடக்கப் பள்ளியிலும் நீர் புகுந்ததால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நிலத்தில் ஊற்று போல் நீர் பெருக்கெடுத்து வருவதால் 2-ஆவது நாளாக இன்றும் நீர் தேங்கி வழிந்தோடியது. இதை மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.