ரூ.50 லட்சம் இழப்பீடு கோரும் திமுக மாவட்டச் செயலாளர்.. நாமக்கல் அதிமுக பிரச்சாரத்தில் என்ன நடந்தது ?
நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற முதலமைச்சரின் பிரச்சாரக் கூட்டத்துக்காக, ஆட்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர் பழனியம்மாள் என்பவர் உயிரிழந்துள்ளார்.
100 நாள் வேலைக்காக சென்ற பழனியம்மாள் என்பவரை, அதிமுகவினர் கட்டாயப்படுத்தி பிரச்சார பொதுக்கூட்டத்துக்கு அழைத்துசென்றதாக குற்றஞ்சாட்டுகிறார் நாமக்கல் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார்.
இதனிடையே விபத்தில் உயிரிழந்த பழனியம்மாள் என்ற 100 நாள் வேலை திட்டப் பணியாளருக்கு அதிமுக சார்பில் ரூ.50 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
கூட்டத்துக்கு ஆட்கள்
நாமக்கல்லில் நேற்று முன் தினம் நடைபெற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பொதுக்கூட்டத்துக்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஆட்கள் திரட்டி வரப்பட்டனர். இதற்கான பொறுப்பை ஒன்றியச் செயலாளர்கள் வசம் ஒப்படைந்திருந்தார் அமைச்சர் தங்கமணி. ஒன்றியச் செயலாளர்களும் கண்களில் படுகிறவர்களை எல்லாம் பிரச்சாரத்துக்கு வந்துட்டு போங்க எனக் கூறி கிராம வாரியாக ஆட்களை கூட்டினர்.
திருமலைப்பட்டி கிராமம்
அந்த வகையில் புதுச்சத்திரம் ஒன்றியம் திருமலைப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலைக்காக வந்த பணியாளர்களை உள்ளூர் அதிமுகவினர் கட்டாயப்படுத்தி டாடா ஏஸ் வாகனம் மூலம் பிரச்சாரத்துக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். மேலும், அவர்களுக்கு அன்றைய வருமானமாக தலா ரூ.200 கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில் சரக்கு மூட்டைகளை ஏற்ற வேண்டிய வாகனத்தில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதன் விளைவாக அது விபத்தில் சிக்கி கவிழ்ந்தது.
அலறல் சத்தம்
இதனால் ஏற்பட்ட அலறல் சத்தம் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகே உள்ள முதலைப்பட்டி என்ற கிராமத்தை பதைபதைக்க வைத்தது. உடனடியாக ஓடோடி சென்ற முதலைப்பட்டி கிராமமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் பழனியம்மாள் என்ற 65 வயது மதிக்கத்தக்க வயது மூதாட்டி நிகழ்விடத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார்.
விபத்தில் சிக்கி
மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் இளைஞர் ஒருவருக்கு நெஞ்சு எலும்பு நொறுங்கிய நிலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஓட்டுநருடன் முன் பக்க சீட்டில் அமர்ந்து பயணித்தவர் எனக் கூறப்படுகிறது.
என்ன நியாயம் இது?
இதையடுத்து விபத்தில் உயிரிழந்த பழனியம்மாள் குடும்பத்தினர் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினர் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். வேலைக்கு வந்தவர்களை எதற்கு கூட்டத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அப்படியே அழைத்துச் செல்கிறவர்கள் ஆட்டுமந்தைகளை போல் சிறிய வாகனத்தில் 30-க்கும் மேற்பட்டோரை அடைத்து வைத்து அழைத்துச் சென்றது நியாயமா என வினவுகின்றனர்.
அதிமுக சார்பில் தருக
இதனிடையே 100 நாள் வேலைக்காக பெயர் பதிவு செய்து கையெழுத்திட்ட பணியாளர்களை விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டத்திற்கு அழைத்துச்சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளர் ராஜேஷ்குமார். இதேபோல் அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க சென்று உயிரிழந்த 100 நாள் வேலை திட்டப் பணியாளர் பழனியம்மாள் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் ரூ.50 லட்சம் இழப்பீடு தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.