ஒரு பேஸ்புக் போஸ்ட் செய்த புரட்சி.. அமெரிக்காவிற்கு செல்லும் 10,000 அகதிகள்.. 4500 கிமீ நடைபயணம்!
அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சம் அடைவதற்காக மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து 10,000க்கும் அதிகமான மக்கள் மிகப்பெரிய பேரணியை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
நியூயார்க்: அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சம் அடைவதற்காக மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து 10,000க்கும் அதிகமான மக்கள் மிகப்பெரிய பேரணியை நடத்தி வருகிறார்கள்.
இப்போது அமெரிக்கா - மெக்சிகோ எல்லை மிகவும் பதட்டமான சூழ்நிலையில் உள்ளது. மெக்சிகோவில் பல்லாயிரக்கணக்கான ''ஹான்டுரஸ்'' நாட்டு மக்கள் அகதிகளாக புகுந்து இருக்கிறார்கள்.
இவர்கள் தற்போது அமெரிக்காவை நோக்கி நடந்து வருகிறார்கள். அமெரிக்காவில் இந்த மாத இறுதியில் தஞ்சம் அடைய இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
யார் இவர்கள்
மத்திய அமெரிக்காவில், கரீபியன் கடலுக்கு அருகே இருக்கும் நாடுதான் ஹான்டுரஸ். இந்த நாட்டை சேர்ந்த மக்கள்தான் தற்போது ஆயிரக்கணக்கில் அமெரிக்காவை நோக்கி நடந்து செல்கிறார்கள். அமெரிக்காவில் தஞ்சம் கோரி இவர்கள் நடக்கிறார்கள். ஹான்டுரஸ் நாட்டில் நிலவும் வறுமை, கலவரம், கொலை, கொள்ளை காரணமாக அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள்.
மோசமான நாடு
மத்திய அமெரிக்க பிராந்தியத்தில் மிகவும் மோசமான நாடு ஹான்டுரஸ்தான். அந்த பகுதியில், ஹான்டுரஸ் நாட்டில் மிக அதிக வறுமை காணப்படுகிறது. அதேபோல் அங்குதான் பணத்திற்காக தினமும் அதிக அளவில் கொலை நடப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது. தொடர் வன்முறை மற்றும் போராட்டம் காரணமாக அம்மக்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.
எப்படி செல்ல வேண்டும்
இவர்கள் அமெரிக்கா செல்ல வேண்டும் என்றால் 4500 கிலோ மீட்டர் தூரத்தையாவது கடக்க வேண்டும். அவர்கள் ஹான்டுரஸ் நாட்டில் இருந்து முதலில் கவுதமாலா செல்ல வேண்டும். அங்கிருந்து பின் மெக்சிகோ செல்ல வேண்டும். அங்கிருந்து 3500 கிலோ தூரம் பயணித்து அமெரிக்கா செல்ல வேண்டும். இதை இவர்கள் நடந்தே செல்கிறார்கள்.
உள்ளே நுழைந்தனர்
கடந்த மாதம் தொடங்கிய இந்த நடைபயணம் தற்போது மெக்சிகோ வந்துவிட்டது. இவர்களில் பலர் மெக்சிகோவில் தஞ்சம் கேட்டு புகுந்து இருக்கிறார்கள். இன்னும் பலர் தஞ்சம் கேட்காமல் மெக்சிகோவில் ரகசியமாக புகுந்து, அமெரிக்காவை நோக்கி நடந்து வருகிறார்கள். மொத்தம் 10 ஆயிரம் பேர் வரை இப்படி அமெரிக்காவை நோக்கி நடந்து வருகிறார்கள்.
பல ஆயிர கிலோமீட்டர்
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் இப்படி நடந்து சென்று கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரே நோக்கம் அமெரிக்காவில் குடியுரிமை பெறுவது மட்டுமே. இதற்கு மெக்சிகோவில் அகதியாக வேண்டும் என்பதால், மெக்சிகோவில் பல ஆயிரம்பேர் காத்து இருக்கிறார்கள்.
எச்சரிக்கை விடுத்துள்ளார்
இவர்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். அமெரிக்க எல்லையில் யாரும் நுழைய கூடாது என்றுள்ளார். இதை நீதிமன்றம் தடுக்கவில்லை என்றால் ராணுவத்தை வைத்து தாக்குதல் நடத்த போகிறேன் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதற்காக ஏற்கனவே சில ராணுவ படைகளை அங்கு களமிறக்கி உள்ளார்.
பேஸ்புக் போஸ்ட்
இவ்வளவு பெரிய நடைக்கு காரணம் ஒரு பேஸ்புக் போஸ்ட்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பல வருடமாக அந்நாட்டு மக்கள், அந்த நாட்டை விட்டு வெளியேற முடியாமல் இருந்தனர். இந்த நிலையில் ஹான்டுரஸ் நாட்டின் முன்னாள் அதிபர் மானுவேல் செலாயா பேஸ்புக்கில், ''நாம் இந்த நாட்டை விட்டு செல்வோம், இது நம்முடைய விருப்பம் கிடையாது, இதுதான் நம்முடைய தேவை, நாம் வறுமையால், வன்முறையால் இந்த நாட்டைவிட்டு வெளியேறுகிறோம்'' என்று உணர்ச்சிகரமாக எழுதி இருந்தார். அவரின் அழைப்பின் பேரில்தான் இந்த பெரிய அகதி அணிவகுப்பு நடக்கிறது.