அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் பெர்னி.. உறுதியானது டிரம்ப் vs ஜோ பிடன்.. செம திருப்பம்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
கொரோனா நோய் காரணமாக அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரங்கள் சுணக்கம் அடைந்து உள்ளது. இந்த வருட இறுதியில் அங்கு தேர்தல் நடக்கும். டிசம்பர் இறுதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அந்நாட்டு புதிய அதிபர் ஜனவரியில் பொறுப்பேற்பார்.
ஆனால் கொரோனா காரணமாக அங்கு அதிபர் வேட்பாளர் தேர்வில் கடுமையான பிரச்சனை ஏற்பட்டது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் வேட்பாளர்கள் செய்யும் பிரச்சாரங்கள் பாதியில் நிறுத்தப்பட்டது. முக்கியமாக ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சாரம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்தியா செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் நெகிழ்ச்சி
கடுமையான போட்டி
அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்ப் மீண்டும் குடியரசு கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட உள்ளார். கட்சிக்குள் அதிபர் வேட்பாளருக்காக நடந்த போட்டியில் டிரம்ப் ஏற்கனவே போதுமான வாக்குகளை பெற்றுவிட்டார். அதே சமயம் இன்னொரு பக்கம் எதிர் கட்சியான ஜனநாயக கட்சியில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் நபர்களை தேர்வு செய்வதற்கான ஜனநாயக பிரைமரி தேர்தல் தீவிரமாக நடந்து வந்தது.
தீவிரமாக நடந்தது
அமெரிக்காவில் ஜனநாயக கட்சிக்கு ஒவ்வொரு நகரத்திலும் ஒரு பிரதிநிதி இருப்பார். மொத்தம் 1,991 பிரதிநிதிகள் இப்படி அந்தகட்சிக்கு இருக்கிறார்கள். இதில் பெரும்பாலான பிரதிநிதிகள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ, அவர்கள்தான் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக நிற்க முடியும். ஜனநாயக கட்சி சார்பாக பெர்னி சாண்டர்ஸ், ஜோ பிடன், பிட்டே புட்டிக், எலிசபெத் வாரன் ஆகியோர் இந்த பிரைமரி தேர்தலில் போட்டியிட்டனர்.
யார் தோல்வி
இதில் பிட்டே புட்டிக், எலிசபெத் வாரன் ஆகியோர் தொடக்கத்தில் தீவிரம் காட்டி, போக போக தேர்தலில் வெற்றிபெற முடியாது என்று தெரிந்ததும் விலகினார்கள். கடைசியில் இந்த போட்டி பெர்னி சாண்டர்ஸ் ஜோ பிடனுக்கு இடையிலான போட்டி என்று மாறியது. தொடக்கத்தில் பெர்னி சாண்டர்ஸ்தான் தேர்தலில் முன்னிலை வகித்தார். அவர்தான் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆவார் என்று கருதப்பட்டது.
விலகினார்
ஆனால் போக போக பெர்னி சாண்டர்ஸ் பின்னடைவை சந்தித்தார். ஜோ பிடன் வரிசையாக பல மாநிலங்களில் முன்னிலை வகித்தார். பணக்காரர்களை விட, பெர்னி சாண்டர்ஸுக்கு ஏழை மக்கள்தான் அதிகம் நிதி அளித்தனர். ஆனாலும் பெர்னி சாண்டர்ஸ் பெரிய அளவில் வாக்குகளை பெற முடியவில்லை. இதனால் தற்போது பெர்னி சாண்டர்ஸ் மொத்தமாக இந்த தேர்தலில் இருந்து விலகி உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
உறுதியாகி உள்ளது
கடந்த அதிபர் தேர்தலிலும் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட விரும்பி கடைசியில் பெர்னி விலகியது குறிப்பிடத்தக்கது. இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஆகவே அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் மற்றும் டிரம்ப் இடையே போட்டி நிலவ போகிறது. முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியில் இருந்த போது துணை அதிபராக இருந்தவர்தான் ஜோ பிடன் என்பது குறிப்பிடத்தக்கது.