பிடன் பதவியேற்பு நாளில் சோகம்...நியூயார்க்கில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி 3 வீரர்கள் உயிரிழப்பு!
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் பாதுகாப்பு படையின் வீரர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நாளில் இந்த விபத்து ஏற்பட்டது அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று இரவு ஹெலிகாப்டரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். மெண்டன் என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
இந்த கொடூர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 3 வீரர்களும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
ரோசெஸ்டருக்கு தெற்கே 17 மைல் தொலைவில் உள்ள மெண்டனில் இந்த விபத்து நடந்ததாக ராணுவமும் மன்ரோ கவுண்டி ஷெரிப் அலுவலகமும் தெரிவித்துள்ளது. விபத்துகுள்ளான ஹெலிகாப்டர், UH-60 பிளாக் ஹாக் வகை ஹெலிகாப்டர் ஆகும் இந்த விபத்து குறித்து மன்ரோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் முதற்கட்ட விசாரணை நடத்தத உள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நியூயார்க் கவர்னர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், அரசு அலுவலக கட்டிடங்களில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுளள்து. அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நாளில் ஹெலிகாப்டர் விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.