போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா? ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் அதிருப்தி
நியூயார்க்: போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவை இலங்கை ராணுவ தளபதியாக நியமித்துள்ளதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் புதிய ராணுவ தளபதியாக சவேந்திர சில்வாவை அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது அப்பாவித் தமிழர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்ததாக சவேந்திர சில்வா மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையமும் சவேந்திர சில்வா மீது போர்க்குற்றங்களை சுமத்தியுள்ளது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சவேந்திர சில்வா நியமனம் தொடர்பாக எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
இந்நிலையில் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா கட்டெரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் ஜாரிக், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் சவேந்திர சில்வா மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது அவரையே ராணுவ தளபதியாக நியமித்திருப்பது குறித்து கவலையை தெரிவிக்கிறோம். ஐ.நா.வின் அமைதிப் பணிகளில் ஈடுபடும் அனைத்து இலங்கை ராணுவத்தினரும் மனித உரிமைகள் பரிசோதனைக்குள்ளாக்கப்படுவார்கள் என்றார்.
இதேபோல் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் கவலையை வெளிப்படுத்தியுள்ளது.