கருப்பு.. அமெரிக்காவை உலுக்கிய ஒரு மரணம்.. பற்றி எரியும் மின்னசோட்டா.. கலக்கத்தில் அதிபர் டிரம்ப்!
நியூயார்க்: அமெரிக்காவில் போலீஸ் விசாரணையின் போது கருப்பின இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது.
Recommended Video
அமெரிக்காவின் மின்னெபோலிஸ் பகுதியில் ஜார்ஜ் பிளாய்ட் என்று 46 வயது கறுப்பின இளைஞர் கடந்த 27ம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டார். கள்ள நோட்டு பயன்படுத்தியதாக இவர் கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்த போது போலீசார் இவரை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் காலை வைத்து அழுத்தி இருக்கிறார்கள்.
விடாமல் 10 நிமிடம் இவரின் கழுத்தில் காலை வைத்து போலீசார் அழுத்தி உள்ளார். இதில் ஜார்ஜ் பிளாய்ட் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியான நிலையில், தற்போது இது அங்கு பெரிய உள்நாட்டு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
மூச்சு விட முடியவில்லை.. துடிதுடித்து பலியான கறுப்பின இளைஞர்.. அமெரிக்காவில் போலீஸின் கொடூர செயல்!
பெரும் போராட்டம்
இந்த மரணம் காரணமாக தற்போது அமெரிக்காவில் மின்னெபோலிஸ் பகுதி இருக்கும் மின்னசோட்டா மாகாணம் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. அங்கு அனைத்து தெருக்களிலும் கருப்பின மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். கருப்பின மக்கள் மொத்தமாக வெளியே வந்து சாலையில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். போலீசாரின் வெறிச்செயலுக்கு எதிராக அங்கு போராட்டம் நடந்து வருகிறது.
தீ வைப்பு
இதனால் தற்போது அங்கு பல்வேறு அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மின்னெபோலிஸ் பகுதியில் இருக்கும் போலீஸ் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டு உள்ளது. இந்த போராட்டம் கலவரமாக முடிந்துள்ளது. அந்த போலீசாருக்கு தண்டனை கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும். கருப்பின மக்களுக்கு எதிரான வன்முறைகளை இனியும் பொறுத்துக்க கொள்ள முடியாது என்று மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.
டிரம்ப் கருத்து
இந்த நிலையில் அங்கு போராடும் மக்களை அதிபர் டிரம்ப் குற்றவாளிகள், ரவுடிகள் என்று கூறியுள்ளார். அதேபோல் இவர்களை போலீசார் அடக்க வேண்டும். சுட்டுத்தள்ள வேண்டும். அமைதிக்கு இவர்கள் குந்தகம் விளைவிக்கிறார்கள் என்று கடுமையாக குற்றஞ்சாட்டி இருக்கிறார். அங்கு பொருட்களை திருட வேண்டும் என்பதற்காக இப்படி கருப்பின மக்கள் போராட்டம் செய்கிறார்கள் என்ற டிவிட்டை கூட அதிபர் டிரம்ப் ஷேர் செய்துள்ளார்.
பெரும் எதிர்ப்பு
இந்த நிலையில் அங்கு டிரம்ப் தேசிய படையை அனுப்பி உள்ளார். இந்த தேசிய படை மாகாண கவர்னர் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். ஆனாலும் தற்போது அங்கு எமெர்ஜென்சி என்பதால் அதிபர் டிரம்ப் அவர்களுக்கு உத்தரவிட்டு படைகளை அனுப்பி உள்ளார். இந்த தேசிய படை அங்கு சரமாரியாக கருப்பின இளைஞர்களை கைது செய்து வருகிறது. இந்த சம்பவத்தை செய்தியாக வெளியிட்ட கறுப்பின சிஎன்என் செய்தியாளரை கூட போலீசார் கைது செய்துள்ளனர்.
கருப்புதான் காரணம்
இதனால் டிரம்பிற்கு எதிராக மக்கள் மொத்தமாக களமிறங்கியுள்ளனர். இந்த ஒரு மரணம் அமெரிக்காவை உலுக்கி உள்ளது. இந்த போராட்டத்திற்கு அங்கு வெள்ளையின மக்கள், பிற சிறுபான்மையினர்கள் ஆதரவு தெரிவிக்க தொடங்கி உள்ளனர். ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்த தவறினார் என்று டிரம்ப் மீது புகார் உள்ளது. தற்போது கருப்பின மக்களின் போராட்டமும் அங்கு டிரம்பிற்கு பேரிடியாக வந்து விழுந்துள்ளது.