ஜார்ஜ் மரணம்.. உலகையே ஆட்டிப்படைத்த "அனானிமஸ்'' ஹேக்கர்கள் மீண்டும் வந்துவிட்டனர்.. ஷாக் பின்னணி!
நியூயார்க்: பல நாட்டு அரசுகளை, நிறுவனங்களை தங்களின் ஹேக்கிங் மூலம் ஆட்டிப்படைத்த அனானிமஸ் (Anonymous) ஹேக்கர் குழு மீண்டும் திரும்ப வந்து இருக்கிறது. அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு கொலையை தொடர்ந்து அனானிமஸ் (Anonymous) குழு மீண்டும் உயிர் பெற்று உள்ளது.
Recommended Video
இதை படிக்கும் பலரும் ஹாலிவுட்டில் வெளியான வி ஃபார் வென்டேட்டா (V fo Vendetta) படத்தை பார்த்து இருக்க வாய்ப்புள்ளது. கருப்பு உடை அணிந்து வெள்ளை நிற முகமூடி அணிந்த ஒரு நபர் அரசுக்கு எதிராக புரட்சி செய்வதாக இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கும்.
எழுத்தாளர் ஆலன் மூர் எழுதிய நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்தான் வி ஃபார் வென்டேட்டா. இந்த படத்தில் ஹீரோ அணிந்திருக்கும் அதே மாஸ்க் அணிந்து கொண்டு உலகம் முழுக்க இயங்கி வரும் பறந்து விரிந்த ஹேக்கிங் குழுதான் இந்த அனானிமஸ் (Anonymous) ஹேக்கிங் குழு.
யார் இவர்கள்?
யார் இந்த அனானிமஸ் (Anonymous) குழு,அவர்கள் மீண்டும் வந்தது ஏன் இப்படி செய்தியாகிறது என்று கேள்வி எழலாம். அனானிமஸ் (Anonymous) என்பது ஒரு ஹேக்கிங் குழு. இதற்கு தலைவர் கிடையாது. இதை யார் உருவாக்கியது என்று யாருக்கும் தெரியாது. உலகம் முழுக்க இதற்கு உறுப்பினர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இதன் உறுப்பினர்கள் யார் என்பது யாருக்கும் தெரியாது. இவர்கள் எப்படி ஒன்று சேர்க்கிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது.
என்ன பணி?
இவர்களின் வேலை, அரசின் தவறுகளை கண்டுபிடிப்பது, அரசை தண்டிப்பது, தனியார் நிறுவனங்கள் செய்யும் குற்றங்களுக்கு தண்டனை கொடுப்பது, இணையத்திலேயே தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பது, ஹேக்கிங் மூலம் நீதியை பெற்று தருவது, சர்வாதிகார ஆட்சியை ஒடுக்குவது என்று பல விஷயங்களை இவர்கள் செய்கிறார்கள். தங்களையே இவர்கள் இணையத்தில் களமாடும் activist அதாவது hactivist என்று அழைத்துக் கொள்கிறார்கள்.
ராபின் ஹூட் ஸ்டைல்
இணையத்தில் மக்களுக்கு நீதியை தேடி தரும், சர்வாதிகாரத்தை எதிர்க்கும் ராபின் ஹூட் குழு இவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இணையத்தில் ஹேக்கிங் மூலம் பல நாட்டு அரசை, நிறுவனங்களை இவர்கள் ஆடிப்போக செய்து இருக்கிறார்கள். இந்த குழு 2003ல் தொடங்கப்பட்ட குழு ஆகும். நாங்கள் பலர் என்று பொருள்படும் "we are legion" என்பதுதான் இவர்களின் வாசகம். ஆம் இதில் உலகம் முழுக்க பல ஹேக்கர்கள் இருக்கிறார்கள்.
என்ன கொள்கை
இவர்களுக்கு என்று தனிப்பட்ட கொள்கை கிடையாது. எங்கு தவறு நடந்தாலும் அந்நியன் விக்ரம் போல தட்டி கேட்க வேண்டும். உலகம் முழுக்க பல ஹேக்கிங் தாக்குதல்களை மேற்கொண்ட இவர்கள் கவனிக்கப்பட்டது 2008ல்தான். அப்போது Church of Scientology எனப்படும் அமெரிக்காவின் ஒரு மதக்குழுவை அனானிமஸ் (Anonymous) தாக்கியது. இந்த சர்ச் மீது வைக்கப்பட்ட பல்வேறு மோசடி புகார் காரணமாக அனானிமஸ் (Anonymous) குழு அவர்களின் இணைய பக்கத்தை முடக்கியது.
தகவல் வந்தது
இதன் மூலம் Church of Scientology குழு குறித்த முக்கிய விஷயங்களை அனானிமஸ் (Anonymous) வெளியிட்டது. அவர்கள் செய்த மோசடிகள் குறித்த விவரங்களை வெளியிட்டது. இந்த Church of Scientologyல் உள்ள பணக்காரர்கள் பலர் இதனால் அனானிமஸ் (Anonymous) மீது கோபம் கொண்டனர். அப்போது பிரபலம் அடைந்த அனானிமஸ் (Anonymous) அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுக்க பிரபலம் அடைந்தது.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
அதன்பின் அமெரிக்காவின் பொருளாதார சரிவின் போது பங்கு சந்தையில் நடக்கும் மோசடிகளை அனானிமஸ் (Anonymous) குழு ஹேக்கிங் மூலம் அம்பலப்படுத்தியது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட அரபு புரட்சிக்கு வித்திட்டதும் அனானிமஸ் (Anonymous) ஹேக்கர்கள்தான். அதேபோல் சோனி நிறுவனத்தை ஹேக் செய்ததும் அனானிமஸ் (Anonymous) குழுதான். அமெரிக்காவின் மிகப்பெரிய போராட்டமான வால் ஸ்டிரீட் போராட்டத்தை ஒருங்கிணைத்ததும் இவர்கள்தான்.
வெளியே வருவார்கள்
உலகில் எங்கே பெரிய அளவில் தவறு நடந்தாலும் முதல் ஆளாக இவர்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக முக்கிய சைய்ப்பர் தாக்குதல்களை இவர்கள் நடத்தி இருக்கிறார்கள். அதேபோல் குழந்தைகளை வைத்து நடக்கும் பாலியல் வீடியோ தயாரிப்புகளை அம்பலப்படுத்தி அதை முடக்கியும் உள்ளனர். பல தனியார் நிறுவனங்களையும் இவர்களின் குழு மொத்தமாக தாக்கி இருக்கிறது.
வரிசையாக தாக்குதல்
அதன்படி பேபால், மாஸ்டர் கார்ட் , விசா, சோனி என்று முக்கிய நிறுவனங்களை அனானிமஸ் (Anonymous) ஹேக்கர் குழு தாக்கி இருக்கிறது. பிரபல விக்கிலீக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பல வருடங்களாக அனானிமஸ் (Anonymous) செயல்ப்பட்டு இருக்கிறது. அதேபோல் அமெரிக்க ராணுவத்திற்கு எதிராகவும், அவர்களின் மனித உரிமை மீறலுக்கு எதிராகவும் நிறைய வீடியோ ஆதாரங்களை அனானிமஸ் (Anonymous) குழு வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வழக்குகள் கைதுகள்
உலகம் முழுக்க பல நாடுகளில் அனானிமஸ் (Anonymous) ஹேக்கர் குழுக்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அனானிமஸ் (Anonymous) ஹேக்கர் குழுவில் இருந்ததாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகளில் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த குழு கடந்த சில மாதங்களாக காணாமல் போய் இருந்தது. இவர்கள் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தனர்.
மீண்டும் வந்து இருக்கிறார்கள்
இந்த நிலையில் உலகையே ஆட்டிப்படைத்த ஆட்டிப்படைத்த அனானிமஸ் (Anonymous) ஹேக்கர் குழு மீண்டும் திரும்ப வந்து இருக்கிறது. அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு கொலையை தொடர்ந்து அனானிமஸ் (Anonymous) குழு மீண்டும் உயிர் பெற்று உள்ளது.அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பின இளைஞர் போலீசாரால் கொலை செய்யப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் விசாரணையில் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தை போலீஸ் நெருக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தாக்குதல்
கடந்த 27ம் தேதி நடு ரோட்டில் அமெரிக்காவில் மின்னெபோலீஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. இதனால் அமெரிக்காவில் உள்நாட்டு போராட்டங்கள் வெடித்துள்ளது. அந்நாட்டு அதிபர் டிரம்பிற்கு எதிராக தீவிரமான போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த கொலையால் கோபம் அடைந்த அனானிமஸ் (Anonymous) குழு மீண்டும் வந்து இருக்கிறது. இந்த முறை அமெரிக்க அரசுக்கு எதிராக கடுமையான ஆதாரங்களை வெளியிட போவதாக அனானிமஸ் (Anonymous) ஹேக்கர் குழு தெரிவித்து உள்ளது.
அதிரடி நடவடிக்கை
இந்த போராட்டங்களை இவர்கள்தான ஒருங்கிணைக்கிறார்கள் என்றும் புகார் உள்ளது. ஏற்கனவே அனானிமஸ் (Anonymous) ஹேக்கர் குழு தனது முதல் நடவடிக்கையை எடுத்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். அதன்படி ஏற்கனவே மின்னேபோலீஸ் இணைய பக்கத்தை அனானிமஸ் (Anonymous) முடக்கியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் போலீஸ் குறித்தும் ராணுவம் குறித்தும் முக்கியமான ஆதாரங்களை வெளியிட போவதாக அனானிமஸ் (Anonymous) தெரிவித்துள்ளது.
பெரிய திட்டம்
முக்கிய சில தகவல்களை வெளியிடுவோம் என்று அனானிமஸ் (Anonymous) கூறியுள்ளது.அதேபோல் அமெரிக்காவில் இணைய ரீதியான தாக்குதல்களை நடத்த போகிறோம். முக்கிய குழுக்கள், நிறவெறியர்கள் இதனால் சிக்க போகிறார்கள் என்று அனானிமஸ் (Anonymous) கூறியுள்ளது. டிரம்ப் குறித்து முக்கிய ஆதரங்களை வெளியிட போகிறோம். அவரின் ரகசியங்களை கசிய வைக்க போகிறோம் என்றும் அனானிமஸ் (Anonymous) கூறியுள்ளது. அதே சமயம் இவர்கள் மீது சில புகார்களும் இருக்கிறது.
என்ன புகார்கள்
அனானிமஸ் (Anonymous) குழுக்கள் பொய்யானது. உண்மையில் இவர்கள் பெரிய ஹேக்கர் குழு எல்லாம் இல்லை. இவர்கள் பொய்யாக உலகை ஏமாற்றி வருகிறார்கள். உண்மையான அனானிமஸ் (Anonymous) எப்போதோ உடைந்துவிட்டது. இப்போது அதே பெயரில் பொய்யான குழுக்கள் நிறைய இயங்கி வருகிறது. இவர்களை நம்பி புரட்சி வெடிக்கும் என்று நம்ப வேண்டாம் என்று பலர் தெரிவிக்கிறார்கள்.