குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
நியூயார்க்: இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்திய தூதரகத்திற்கு எதிரில், அமெரிக்க காயிதே மில்லத் பேரவை பிரம்மாண்டப் பேரணி நடத்தியுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, இந்தியாவில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அமெரிக்காவிலும், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
குடியரசு தினத்தன்று நியூயார்க் நகரில், இந்திய தூதரகத்திற்கு எதிரில், அமெரிக்க காயிதே மில்லத் பேரவை பிரம்மாண்டப் பேரணி நடத்தியுள்ளது. பேரவை நிர்வாகிகள் எழுப்பிய விண்ணைமுட்டும் ஆசாதி கோஷங்களால், அதில் பங்கேற்ற மக்கள் பெரும் உற்சாகமடைந்தனர்.
நேற்று நியூயார்க் நகரில் நடந்த இந்த பேரணி, அமெரிக்கா முழுவதும் நடந்து வரும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களின் ஒரு பகுதியாகும். மேலும் சமீபத்தில் அமெரிக்காவில் இனப்படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்க அமைக்கப்பட்ட கூட்டமைப்பே, நாடு தழுவிய இந்த போராட்டங்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த கூட்டமைப்பில் அமெரிக்க மக்கள் உரிமை அமைப்புகளான அமெரிக்க காயிதே மில்லத் பேரவை, மனித உரிமைகளுக்கான ஹிந்து அமைப்பு, ஈக்விட்டி லாப்ஸ், நியூயார்க் குரு ரவிதாஸ் சபை, கறுப்பின மக்கள் வாழ்வு மையம், அமைதிக்கான யூதர்களின் குரல் ஆகிய அமைப்புகள் அமெரிக்காவில் நாடு தழுவிய இப்போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறது.
இக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க காயிதே மில்லத் பேரவை தலைவர் வழக்கறிஞர் சல்மான் முஹம்மது "குடியுரிமைச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமே எதிரான சட்டம் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றம் பரப்பப்பட்டு வருகிறது. உண்மை என்னவெனில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு போன்ற சட்டங்கள், இந்திய நாட்டின் அரசியல் சாசனத்தையும் அது வழங்கிய மதச்சார்பின்மையையும் அழிக்கக் கூடிய ஆபத்தானவை " என்று கூறினார்.
கூட்டத்தில் ஏந்தி வரப்பட்ட ஒரு பதாகையில் "இந்தியாவில் இந்து முஸ்லிம்களின் ஒற்றுமை என்பது இந்தியாவின் ஈடு இணையற்ற காதல் காவியம் " என்றும் இன்னொரு பதாகையில் " அநீதி என்பது சட்டமாக்கப்படும் போது, அதனை எதிர்த்துப் போரிடுதல் கடமையாகிவிட்டது என்றும், வேறொரு பதாகையில் மார்ட்டின் லூதரின் கனவுகளும் அதற்கெதிரான இந்தியாவின் நாஜி கொள்கைகளும் என்பன போன்ற பதாகைகள் ஏந்தி வரப்பட்டன.
தாழ்த்தப்பட்ட மக்களின் அடையாளச் சின்னங்களான பாபா சாகேப் அம்பேத்கர், சாது ரவிதாஸ் போன்றோரின் உருவப் படங்களோடு "இந்திய குடிமக்களாகிய நாம்" என்ற பதாதைகள் ஏந்தி கனெக்டிகட்டிலிருந்து வந்த சீதாராமும் அவரது நண்பர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி
இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், இந்திய நடுவணரசு, குடியுரிமை கருப்புச் சட்டங்கள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும், அமெரிக்க அரசு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மீது தடைகளை பிரப்பிக்க வேண்டும் என்பன போன்ற சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க அமைப்பின் பரிந்துரைகளை கோரிக்கைகளாக முன் வைத்தனர்.
மனித உரிமைகளுக்கான இந்து அமைப்பின் சுனிதா விஸ்வநாத் கூறுகையில் "இந்து தர்மம் எல்லா மனிதர்களையும் எல்லா நம்பிக்கைகளையும் அன்புடன் அரவணைக்கும் விசாலமான மதமாகும். ஆனால் இந்து தேசியவாதம் என்பது வெறுப்பை நடுநாயகமாகக் கொண்டது" என்றார்.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஆண்கள் பெண்கள் குழந்தைகளென அனைவரும் வலதுசாரி இந்திய நடுவணரசுக்கெதிரான கண்டனக் கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். குடியரசு தினத்தன்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், இந்திய தேசியக் கொடியை தம் கைகளில் ஏந்தி, இந்திய தேசிய கீதத்தை இசைத்தவாறு சென்றனர்.
சர்வதேச தலித் மக்களுக்கான பகுஜன் அமைப்பின் சீதாராம் பேசுகையில் "இன்று நாம் பேசவில்லை என்றால், நாளை பேசுவதற்கு நாம் எவரும் இருக்க மாட்டோம்" என்று கூறினார். இந்து ராஜ்ஜியத்தை மக்கள் மீது திணிக்கும் மோடிக்கு நினைவூட்டும் விதமாக இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பை வாசித்தனர். ஷேக் உபைத் பேசுகையில் " மோடியின் அரக்க கொள்கைகளை எதிர்த்து போராட்டம் இந்தியாவில் மட்டுமில்லை இன்று சர்வதேச அளவில் ஒருமித்த எதிர்ப்புணர்வை பரப்பி விட்டு விட்டது" என்று கூறினார்.
நியூயார்க் சர்வமத அமைப்பின் பேராயர் குளோ பிரேயர் கூறுகையில், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் கூறிய "குரலற்றவர்களுக்காக குரல் கொடுங்கள்" என்ற வாசகத்தை நினைவூட்டினார்.