சல்மான் ருஷ்டியை கொல்ல முயற்சி.. கைதானவர் ஷியா தீவிரவாதியா? தீவிர விசாரணை
நியூயார்க்: எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கொலை முயற்சியில் கைது செய்யப்பட்ட நியூ ஜெர்சியை சேர்ந்த நபருக்கு ஷியா தீவிரவாதத்திடம் அனுதாபம் இருந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
ருஷ்டி எழுதிய புத்தகம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த புத்தகத்தை ஜப்பான் மொழியில் மொழிபெயர்த்தவர் ஏற்கெனவே கொல்லப்பட்டுள்ளார்.
இவருக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்ததால் பல்வேறு நாடுகளில் சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் அமெரிக்காவில் அவர் மீது கொலை முயற்சி நடத்தப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திரம் அடைந்த 1947ல் மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டவராவார். இந்நிலையில் 1988ல் அவர் எழுதிய 'சாத்தானின் வசனங்கள்' எனும் புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அவருடைய உயிருக்கும் பெரும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது. இந்த புத்தகம் முஸ்லீம் மதத்திற்கு எதிராக இருப்பதாக கூறி பல நாடுகள் சல்மான் ருஷ்டியின் புத்தகத்திற்கு தடை விதித்தன. பல முஸ்லீம் நாடுகளில் உள்ள மக்களுக்கு இந்த புத்தகம் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
ஈரானைச் சேர்ந்த மதகுருவான ஆயத்துல்லா ருஹோலா என்பவர் சல்மான் ருஷ்டியை முஸ்லீம்கள் பார்த்த இடத்தில் கொன்று விடுங்கள் என வெளிப்படையாகவே அறிவித்தார். இதனால் சல்மான் ருஷ்டி அச்சத்துடனேயே வாழ்ந்து வரும் சூழல் இருந்தது. இந்த நிலையில் நியூயார்க்கில் உள்ள சாட்டகுவா நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டார். அப்போது அவரை பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது சல்மான் ருஷ்டியை அடையாளம் தெரியாத நபர் மேடைக்கு சென்று மறைத்து வைத்திருக்கும் கத்தியால் குத்தினார்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ருஷ்டி தற்போது தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளார். அவரது ஒரு கண் பார்வை பறிபோவதற்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளவர் 24 வயதுடைய ஹாடி மாதர் என்பதும் இவருக்கு ஷியா தீவிரவாதத்திடம் அனுதாபம் இருக்கலாம் என்றும் காவல்துறையில் சந்தேகித்துள்ளனர்.
கலிபோர்னியாவில் இருந்து ஹாடி சமீபத்தில்தான் நியூ ஜெர்சிக்கு இடம்பெயர்ந்திருக்கிறார். ஃபேர்வியூ பகுதியில் அவர் கடைசியாக தங்கி இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இவர் போலியான ஓட்டுநர் உரிமத்தை வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதற்கான முக்கிய நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்றும், ஆனால் இவரது பேஸ்புக் கணக்கை பரிசோதித்ததில் அவர் Islamic Revolutionary Guard Corps எனபடும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் அனுதாபியாக இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். இவரது ஆரம்ப கால செயல்பாடுகள் ஈரானிய அரசாங்கக் குழுவிற்கு அனுதாபம் காட்டுவதாக இருப்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆனாலும் இதுவரை உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை. தாக்குதலில் இவர் ஈடுபட்டபோது முழுக்க முழுக்க கருப்பு உடையணிந்து முகமூடி போட்டிருந்ததாகவும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்போது இவரைத் தொடர்ந்து மாட்டர் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.