பில் கிளிண்டன் வீட்டில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு.. ஒபாமா வீட்டுக்கும் பார்சல்
நியூயார்க்: முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும் ஹில்லாரி கிளிண்டன் ஆகியோர் வசித்து வரும் நியூயார்க் புறநகர் வீட்டில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் அருகே இந்த பெரிய வீடு அமைந்துள்ளது. ஹில்லாரி கிளிண்டனுக்குச் சொந்தமானது இது. இந்த வீடு மிக மிக பழையானது, அதாவது 1763ம் ஆண்டு கட்டப்பட்ட வீடாகும்.
5 படுக்கை அறைகள், 4 பாத்ரூம், பெரிய நீச்சல் குளம் என 3 அடுக்குகளுடன் கூடிய சகல வசதிகளும் கொண்ட மிகப் பெரிய பண்ணை இல்லம் இது. மிக மிக பாதுகாப்புடன் கூடிய வீடுமாகும் இது.
இந்த வீட்டில்தான் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் எந்த இடத்தில் வெடிகுண்டு இருந்தது. இதை கண்டுபிடித்தது யார், யார் வைத்தது என்ற விவரமும் இதுவரை தெரியவில்லை.
வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் கிளிண்டன் தம்பதியினர் வீட்டில் இருந்தனரா என்பதும் தெரிவிக்கப்படவில்லை. செப்பக்குவா என்ற இடத்தில் இந்த வீடு உள்ளது. போலீஸாரும், எப்பிஐ அதிகாரிகளும் இணைந்து விசாரணையில் குதித்துள்ளனர்.
கோடீஸ்வரர் ஜார்ஜ் சோராஸ் வீட்டில் நேற்றுதான் ஒரு வெடிகுண்டு தபால் பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஹில்லாரி கிளிண்டன் வீட்டில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒபாமா வீட்டிற்கும் வெடிகுண்டு பார்சல்:
இதற்கிடையே, இன்னொரு முன்னாள் அதிபரான பராக் ஒபாமாவின் வாஷிங்டன் வீட்டுக்கு தபாலில் வெடி பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதை ரகசிய போலீஸார் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தி விட்டனர். அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.