பிரேசில், ரஷ்யா, பெருவில் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா - ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு
நியூயார்க்: பிரேசில், ரஷ்யா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் நேற்று ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு அமெரிக்காவில் தொடர்ந்து நீடித்து வருகிறது. அமெரிக்காவில் நேற்று மட்டும் 21,712 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று ஒரே நாளில் 1,772 பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசிலில்தான் அதிக பாதிப்பு இருந்தது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 11,555 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. அத்துடன் பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 754 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர்.
பிரேசிலைத் தொடர்ந்து ரஷ்யாவில் ஒரே நாளில் 10,028 பேருக்கும் பெருவில் 4,247 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நாடுகளுக்கு அடுத்ததாக ஒரு நாள் பாதிப்பில் இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது.
பி.எம்-கேர்ஸ் நிதியில் இருந்து கொரோனா தடுப்புக்காக ரூ.3,100 கோடி ஒதுக்கீடு.. மத்திய அரசு
இந்தியாவில் நேற்று மட்டும் 3,763 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மொத்தம் 136 பேர் நேற்று இந்தியாவில் பலியாகி உள்ளனர். இந்தியாவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் நேற்று மட்டும் 3,242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அங்கு நேற்று 494 பேர் மரணித்தனர்.